

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதன்படி இன்றுடன் போர் முடிவுக்கு வரும் என்று உலகமே எதிர்பார்த்த நிலையில், எங்கள் இலக்குகளை முழுமையாக எட்டும் வரை போர் தொடரும் என்று அறிவித்துள்ளார் டிரம்ப்.
சற்றுமுன் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானின் கடற்படையை அழித்து விட்டோம் எனவும், மின்சக்தியை அழிப்பதே அடுத்த இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் கூறுகையில், “ஈரான் போரில் நான் ராஜதந்திர முறையை பயன்படுத்த விரும்பினேன். எந்த சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது. எரிசக்தி சேவையில் அமெரிக்கா தன்னிறைவு அடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இணைந்து கச்சா எண்ணெயை எந்த அளவிற்கு தயாரிக்குமோ, அதே அளவிற்கு நாங்களும் தயாரிக்கிறோம்.
எரிசக்தி தேவைக்காக மத்திய கிழக்கு நாடுகளை ஒருபோதும் அமெரிக்கா சார்ந்து இருக்காது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ராணுவம் ஈரானில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. இந்தப் போரில் ஈரான் தோற்றால் ஹார்மூஸ் ஜலசந்தி தானாகவே திறக்கப்படும். தீவிரவாத சக்திகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் அனைத்தையும் அழிப்போம். கச்சா எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதே இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள், ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்க அமெரிக்காவிற்கு துணை நிற்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களிடம் கச்சா எண்ணெயை வாங்குங்கள்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.