

இந்தியாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்களை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இனி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளைப் பயன்படுத்த கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு KYC (Know Your Customer) சரிபார்ப்பை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன்படி சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மற்றும் வதந்திகளைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு பயனரும் தங்களின் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து கணக்கை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு பயனர் சட்ட விரோதமான கருத்துக்களைப் பதிவிட்டால், அவர்களை எளிதாகக் கண்டறிய இந்த முறை உதவும் என்று நாடாளுமன்ற குழு கருதுகிறது. சிறார்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் சென்றடைவதைத் தடுக்க முறையான வயது சரிபார்ப்பு அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு கேஒய்சி சரிபார்ப்பு செய்வதன் மூலம், போலி கணக்குகள் உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முடியும் என நாடாளுமன்ற குழு வலுவாக நம்புகிறது.
தற்போது வரை இதுவொரு பரிந்துரையாக மட்டுமே இருக்கிறது. இது அதிகாரப்பூர்வ சட்டமாக நடைமுறைக்கு வரும்போது, சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது செயலிகளில் இதற்கான மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக கணக்குகள் மட்டுமின்றி டேட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் தளங்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயமாக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது
நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை சட்டமாக அங்கீகரிக்கப்பட்டால் வங்கிக் கணக்கு தொடங்குவது போலவே, சமூக ஊடக கணக்கு தொடங்கவும் ஆதார் அல்லது பிற அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படலாம்.
ஏற்கனவே உள்ள சமூக வலைதள கணக்குகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகாருக்குள்ளாகும் கணக்குகளை உடனடியாக முடக்க இந்த நடைமுறை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் அல்லது போலி கணக்குகளை தடுக்கத் தவறும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பயனர்களின் வயதுக்கு ஏற்ப இரவு நேரங்களில் லாகின் செய்யத் தடை மற்றும் திரை நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட வெவ்வேறு அளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது.