

மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரால், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக ரேஷன் கடைகளில் கூடுதல்ர மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த மார்ச் 15-ம் தேதி ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 48,000 லிட்டர் மண்ணெண்ணெயை ஒதுக்கியது மத்திய அரசு.
இந்நிலையில் அவசர கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மண்ணெண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் 2 பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் 1 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கூடுதலாக 48,000 லிட்டர் சேர்த்து, மொத்தம் 1,48,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும்.
குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதை தடுக்கவும், தகுதியான மக்களுக்கு மண்ணெண்ணெய் சென்றடைவதை உறுதி செய்யவும் சிறப்பு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அவசர கால நடவடிக்கை என்பதால், ரேஷன் கடைகள் மட்டுமின்றி பெட்ரோல் பங்குகள் மூலமாகவும் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட இருப்பது, பொதுமக்களுக்கு பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 இந்திய கப்பல்கள், ஈரானில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இதன்மூலம் ஒரு நாளுக்குத் தேவையான எரிபொருள் தேவை பூர்த்தி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு நிரந்தர ஏற்பாடு அல்ல. மேற்காசியப் போர் சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த 60 நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் ஒரு தற்காலிக அவசர கால நடவடிக்கையாகும்.
டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே 'மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத மாநிலங்களாக' அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போதைய நெருக்கடியால் இங்கும் விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகளில், ஒவ்வொரு பங்கிற்கும் அதிகபட்சமாக 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் வரை இருப்பு வைக்க அனுமதி உண்டு