

மகளிர் ப்ரீமியர் லீக (WPL) கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் ஆர்சிபி அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக WPL கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி WPL 2026 சாம்பியன் ஆனது ஆர்சிபி.
5அணிகள் பங்கேற்று விளையாடிய இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய இரு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இவ்விரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி வதோதராவில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.
நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி மீண்டும் கோப்பையை தக்க வைக்குமா அல்லது நான்காவது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி இம்முறையாவது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் இறுதிப்போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியினர், தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான லிசெல் லீ 37 ரன்களுக்கும், ஷபாலி வர்மா 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு லாரா வோல்வார்ட் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லாரா 44 ரன்களுக்கும், ஜெமிமா 57 ரன்களுக்கும் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் சினெல் ஹென்றி அதிரடியாக விளையாடி 35 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களைக் குவித்தது. ஆர்சிபி தரப்பில் சயாலி, அருந்ததி ரெட்டி மற்றும் டி கிளர்க் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களத்தில் இறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, கேப்டன் வந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜார்ஜியா வால்.
இருவரும் சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி அதிரடி காட்டினர். இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்த டெல்லி அணி கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஜார்ஜியா மற்றும் மந்தனா இருவரும் அரைசதம் விளாசி, பெங்களூரு அணியை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றனர்.
மந்தனா 87 ரன்களிலும், ஜார்ஜியா 79 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியாக பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.