

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தவர் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி. திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனை இவர் வென்றிருந்தார்.
இந்நிலையில் வாக்கு வித்தியாசம் ஒன்றாக உள்ள சூழலில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும், அதுவரை சீனிவாச சேதுபதி எம்எல்ஏ-வாக பதவி ஏற்க கூடாது எனவும் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றனர்.
ஏற்கனவே 108 தொகுதிகளை வென்றெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இந்தியன் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றூம் இந்தியன் முஸ்லிம் யூனியன் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கிறது தவெக.
இன்று தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், பெரிய கருப்பன் தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டால், அது தவெக-விற்கு பாதகமாக அமைந்து விடும்.
தேர்தல் முடிவுகள் வெளியான போதே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தோல்வி பெற்றதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இன்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படுவது அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானாலும், அதனால் தவெக அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் தற்போது தவெக-வின் பலம் 120 ஆக உள்ளது.
1967-ம் ஆண்டு முதல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்தன. இந்நிலையில் கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட கட்சி அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. அதுவும் புதிதாக உருவான ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆடஅசியைப் பிடிப்பது வரலாற்றுச் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வென்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தவெக-விற்கு தலைவலியாக மாறியுள்ளது. பெரும்பாலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தவெக-விற்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.