

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுக்க 5 கோடி 67 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வேலைகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்களது தொகுதிகளை இறுதி செய்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியை கொடுக்கலாம் மற்றும் விருப்ப மனு பெறுதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலில் களம் இறங்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் பார்வையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் 2 தொகுதியில் போட்டியிடப் போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் ஒரு வேட்பாளார் இரு தொகுதிகளில் போட்டியிடலாமா சட்டம் சொல்வதென்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட எந்தச் சட்டமும் தடை விதிப்பதில்லை. ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது தேர்தல் முறைப்படி அரசியல் சட்டத்திலுள்ள விதி. நமது அரசியல் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்(RPA) என்ற சட்டத்தின் கீழ் ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதி உள்ளது. ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அவர் 10 நாட்களுக்குள் ஒரு தொகுதியைத் தேர்வு செய்து, மற்றொன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்.
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிட அனுமதிக்கும் முறையானது 1996-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின், துணைப்பிரிவு 33(7) என்ற ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு முன், இந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விதி பெரும்பாலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களுக்குப் பொருந்தும். உள்ளாட்சித் தேர்தல்களில் விதிகள் வேறுபடலாம்.
அந்த வகையில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் தான் வெற்றி பெறுவோமோ மாட்டோமோ என்ற அச்சத்தில், பாதுகாப்பிற்காக மற்றொரு தொகுதியிலும் போட்டியிடுவது அந்த வேட்பாளரின் சுயநலத்தையே காட்டுகிறது. குறிப்பாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் அரசியலில் முன்னணி தலைவராகவும், முக்கியமான பதவிக்கு தகுதி பெற்றவராகவுமே இருப்பார். மேலும் அவர் இருதொகுதிகளில் போட்டியிட காரணம் எப்படிவும் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற சுயநலம் தான்.
இரு தொகுதியிலும் அவர் வெற்றி பெறுவாரானால் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி காலியாகும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் பொழுது அரசுக்கு வீண் பண விரயம் ஏற்படுகிறது.
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரண்டும் தொகுதியில் இரண்டு தொகுதிகளிலும் வென்றார்.
1957-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பால்ராம்பூர், மதுரா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பால்ராம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.
அதேபோல், இந்திரா காந்தி, பிஜு பட்நாயக், என்.டி.ராமாராவ் போன்ற மறைந்த தலைவர்கள் பலரும் இவ்வாறு போட்டியிட்டுள்ளனர். தற்போதுள்ள, சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் போன்ற தலைவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டுள்ளார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் வயநாட்டில் வெற்றிப் பெற்றார்.
இப்படி பல முக்கிய தலைவர்களும் இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள நிலையில் இதேமுறையை பின்பற்றி விஜய்யும் இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாக விட்டாலும், 2 தொகுதிகளில் அவர் போட்டியிட விரும்புவது உண்மைதான் என்று தவெக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.