

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றிற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, சான்றிதழ்களை வழங்க சமீப நாட்களாக கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இனி சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், அடுத்த 5 நாட்களில் சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் ஒவ்வொரு சான்றிதழுக்கும் பிரத்யேகமான விண்ணப்ப படிவங்கள் இருந்தன. அதனை நிரப்பி உரிய ஆவணங்களுடன் விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர்களிடம் கையொப்பம் பெற்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் தற்போது சாதி சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் விண்ணப்பித்த உடனே அந்தத் தகவல் கிராம நிர்வாக அலுவலருக்கு (VAO) சென்று விடும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் வருவாய் ஆய்வாளரின் (RI) ஒப்பதலுக்கு அனுப்பப்படும். இருவரும் ஒப்புதல் அளித்த பிறகு, உங்களது விண்ணப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தின் பார்வைக்கு செல்லும். அதன்பிறகு ஆன்லைனிலேயே உங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த ஆன்லைன் நடைமுறையில் கால தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “மக்களுக்கு தற்போது சாதி சான்றிதழ் விரைவாக கிடைக்க வேண்டும் என்பதே முக்கியத் தேவையாக உள்ளது. அதோடு வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தால் அடுத்த 5 நாட்களில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சான்றிதழ்களை விரைந்து வழங்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஐந்தே நாட்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படி 5 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை எனில், விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் பலரும் கல்லூரிகளில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் முக்கிய ஆவணமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘5 நாட்களில் சாதி சான்றிதழ்’ என்ற அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 நாட்களிலேயே சாதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்பதால், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
மேலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கும் பொது மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.