

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடாக அரசுக்கு உத்தரவிட்ட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல திமுக சார்பாகவும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகர் இடையே நீண்டகாலம் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவு நீரை விடுவிக்க மறுத்து கர்நாடகா தொடர்ந்து அடாவடி செய்து வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தியன் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகா தண்ணீரை திறப்பது இல்லை. இந்த ஆண்டு தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை கர்நாடகம் தரவில்லை. உபரி நீரை மட்டுமே திறந்து விட்டு வருகிறது. கேரளாவில் பெய்த மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதால் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை திறந்துவிட கர்நாடகாவுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. திமுக மற்றும் சில அமைப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.
முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில் (காவிரி வழக்கு) , ஜூலை 30 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் உத்தரவிட்டது.
உத்தரவுகள் இருந்தபோதிலும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீர்வரத்து 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது.
எனவே, கர்நாடகா அந்த உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. நடப்பு ஆண்டில் போதுமான நீர்வரத்து இருந்த போதிலும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், கர்நாடக அரசு மதிக்க தவறி விட்டது. ஏதேதோ காரணங்களைக் கூறி, முழுமையாக நீரை திறக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது’ என்று கூறபட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்த நிலையில் கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் ஏன் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
மேலும், கடவுள் தந்த மழை நீரை அணைகளில் மொத்தமாக சேமிக்க முடியாத காரணத்தினாலேயே திறந்துவிட்டுள்ளீர்கள் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்டதே மிக மிக குறைவான நீர் தான் என்று கூறினார்.
அப்போது தமிழக அரசு சார்பில், காவிரி நீரை திறந்து விட கூறி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. மழை பெய்ததன் காரணமாக அணை முழுவதும் நிரம்பியதால் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் திறந்து விட கூறியதே மிக மிக குறைவான தண்ணீர் தான். ஆனால் அதனையும் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. எனவே தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.
கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரைத் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைக் கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்துள்ளார். மேலும், கடுமையான சூழல் நிலவியபோதிலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதை உறுதிசெய்ய முயன்றுள்ளோம். ஆரம்பத்தில் சில நாட்களில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டை சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீர் திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 24-ம்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.