

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை மூலம் (Kalaignar Magalir Urimai Thogai)ரூ.1000 உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் (KMUT)கீழ், தமிழ்நாடு அரசு, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பிப்ரவரி 2026 நிலவரப்படி சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாகக் கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் திமுக அரசு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் என ரூ.3000 மற்றும் கோடை தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தொகையை பிப்ரவரி மாதமே அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்து விட்டனர்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மே மாதம் முதல் ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தோல்வி அடைந்தால் மகளிர் உரிமை தொகை இனி என்னவாகும் என்ற கேள்வி பெண்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆனால் தவெகவும் மதிப்புமிக்க மகளிர் திட்டத்தின்கீழ் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் பெயர் உடனடியாக மாற்றப்பட்டு மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் இந்த மாதமே ரூ.2500 வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் தவெகவினர், மதிப்புமிக்க மகளிர் திட்டம், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, புதிய பயனாளிகளை தேர்வு செய்த பின்னரே செயல்படுத்தப்படும் என்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் அதில் விஜய் தான் இறுதி முடிவு எடுப்பார்.
எனவே இந்த மாதம் ரூ.1000 பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் தற்போதுபோல இந்த திட்டத்தின் பெயரை மாற்றி ரூ.1000 வழக்கம் போல் பெண்கள் கணக்கில் வரவு வைக்கவும் முடிவு எடுக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதேசமயம், தகுதியுள்ள பலருக்கு இதுவரை பணம் வராத நிலையில், புதிய அரசு அமைந்து, தகுதியானவர்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டால் புதிய பயனர்கள் சேர்க்கப்படலாம். 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தத் திட்டத்தை தொடர்ந்து எதிர்பார்க்கிறார்கள். இது சிறு சிறு வீட்டுச் செலவுகளுக்குப் பெரிதும் உதவியாக உள்ளது.
பொதுவாக, இந்தத் திட்டம் பெண்களுக்கு ஒரு சிறிய, அதேசமயம் நிலையான வருமானத்தைக் கொடுப்பதால், இது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் பெண்கள் உறுதியாக உள்ளனர். மேலும் புதிய ஆட்சியில் தகுதியற்றவர்களை நீக்கிவிட்டு, உண்மையில் ஏழை எளிய குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உரிமைத்தொகை கிடைக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
இதேபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமான என்ற கேள்வியும் எழுந்துள்ளது.