

இந்திய ரெயில்வேயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைத் தொழில்நுட்பத்துடன் கூடிய நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் அறிமுகமாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் அரியானாவின் ஜிந்த்-சோனிபட் இடையே தனது பயணத்தை ஜூலை 17-ம்தேதி தொடங்கியது. இதன் மூலம், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் ரெயில் சேவையை அறிமுகப்படுத்திய உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது.
பசுமை ரெயில் திட்டத்தின் முன்னோடியாக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டத்தில், இந்தியா பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது.
பல்வேறு வளர்ந்த நாடுகளும், இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ரெயிலை மட்டுமே இயக்கும் நேரத்தில், வான் நீல நிறத்தில் 10 பெட்டிகள் அடங்கிய ரெயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரெயில்களாக இந்திய ரெயில்கள் இருக்கும். எனவே, நம் நாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரெயில், அளவு மற்றும் லட்சியம் ஆகிய இரண்டிலும் குறிப்பிட்ட முன்னேற்றத்தை கொண்டுள்ளது.
பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த ரெயிலை இயக்குவதற்கு ரெயில்வே அமைச்சம் ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 17-ம்தேதி தனது சேவை தொடங்கியது.
ஹைட்ரஜன் ரெயில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற ஹைட்ரஜன் ரெயில் தொழில்நுட்பத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், ஹைட்ரஜன் ஆற்றல் ரெயில்கள் உலகளவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்- ICF) தயாரிக்கப்பட்ட இந்த ரெயில்,
ஹைட்ரஜனை மின்சாரமாக மாற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. முழுமையாக 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையில் நீராவி மட்டுமே வெளியேறுவதால் கார்பன் உமிழ்வு இன்றி, மாசுபாடு குறைகிறது. அந்தவகையில் டீசல் ரெயில்களை விட தூய்மையான சூழலை இது உருவாக்குகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படாது. மேலும் இந்த ரெயில்கள் மிகக் குறைந்த சத்தத்தையே உருவாக்குகின்றன. இந்த ரெயிலுக்கு புதிய மின்சாரக் கம்பிகள் அல்லது புதிய தண்டவாளங்கள் தேவையில்லை. ஏற்கனவே உள்ள டீசல் வழித்தடங்களிலேயே எளிதாக இயக்கலாம்.
இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், ஹைட்ரஜன் எரிபொருளைப் பாதுகாப்பாகக் கையாள ரெயில் புறப்படும் இடத்தில் ஹைட்ரஜன் கசிவு கண்டறியும் பல அடுக்கு சென்சார்கள், தானியங்கி செயல்பாட்டு நிறுத்தம் மற்றும் தீ தடுப்பு அமைப்புகள் வைக்கப்பட்டிருக்கும், இது தவிர தொடர்ச்சியான கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
10 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 2600 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஜிந்த்- சோனிபட் இடையேயான 89 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்துக்குள் அடையும். இடையில் இந்த ரெயில், அதாவது ஜிந்த் நகரம், பாண்டு பிண்டாரா, லலித் கேரா ஹால்ட், பாம்பேவா, இசாபூர் கேரி ஹால்ட், புட்டானா ஹால்ட், கண்ட்ராய் ஹால்ட், ராப்ரா ஹால்ட், லாத், மோஹனா, பார்வாஸ்னி ஹால்ட், சோனிபட் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், தொடக்கத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்துக்கே இயக்கப்படுகிறது. தினசரி 2 முறை இந்த ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரெயில் என்பது தினசரிப் பயணிகளுக்கான மிகச் மலிவான மற்றும் மாசற்ற பசுமைப் போக்குவரத்து சேவையை இலக்காகக் கொண்டு இயக்கப்படுகிறது.
குறைந்த தூரப் பயணத்திற்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு ஹைட்ரஜன் ரெயில் சிறந்த தேர்வாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் மலிவான கட்டணமாகும். ரெயில்வே அதிகாரிகளின் தகவலின்படி, பயண தூரத்தைப் பொறுத்து இதன் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில், சாமானிய மற்றும் தினசரிப் பயணிகள் மிகக் குறைந்த செலவில் பயணம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த ரெயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இது, ரெயில் போக்குவரத்து துறையில், இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், 'தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்' மற்றும் நாட்டின் நீண்டகால 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' இலக்கை அடைவதற்கு பங்களிக்கிறது.