

இளம் வயதிலேயே விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் கபடி விளையாடும் போதே உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் குத்துச்சண்டை போட்டியின் போதே 15 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சந்திரபாபு என்பவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவரும் பங்கேற்றார்.
தனது அபாரத் திறமையால், இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஹரிஷ், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என அவருடைய பெற்றோரும், ஆசிரியரும் எதிர்பார்த்த நேரத்தில் தான் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது.
இறுதிப் போட்டியில் சக வீரரை எதிர்கொண்டு போட்டியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ஹரிஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அப்போலா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவர் ஹரிஷ்க்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 18) மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசையாய் வளர்த்த மகனை இழந்து வாடும் பெற்றோர், இந்தத் துயரமான தருணத்திலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
புத்திரனை இழந்த சோகத்திலும் பெற்றோரின் மனித நேயமிக்க இந்த முடிவை சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
மகனை இழந்தாலும், பிறருக்கு வாழ்வளிக்க ஹரிஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்திருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம். மாணவன் ஹரிஷ் இறந்தாலும், அவனுடயை உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
தற்போது கண்கள் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பிற நோயாளிகளுக்குப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஹரிஷின் உடல் உறுப்புகள் சுமார் 10 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தற்காப்பு மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகளவில் தியானம் மற்றும் யோகா செய்வதற்கு பயிற்சி அளித்தல் அவசியமாகும். அப்போது தான் இதுபோன்ற உயிரிழப்புகள் இனி நிகழாமல் இருக்கும்.