

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதியில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தவெக, திமுக அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. குதிரை பேரம் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கூட்டம் சாட்டிய நிலையில் இந்த இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றி அவசியம் என முதல்வர் விஜய் கருதுகிறார். இதற்காக கடந்த வாரம் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது தவெக தலைமை.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் நேரடியாக ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
முதலில் மதுராந்தகத்தில் 2 நாட்கள், அதன் பிறகு தாராபுரத்தில் 2 நாட்கள் என 2 கட்டங்களாக முதலமைச்சர் விஜய் தவெக வேட்பாளர்களை ஆதரித்து 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
முதல்வர் விஜய்யின் பிரச்சார தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பிறகு முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களுக்குப் பிறகு இருவரும் தங்கள் எம்எல்ஏ பதிவியை இராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.
இந்நிலையில் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களாக ராஜினாமா செய்தவர்களையே அறிவித்தது கட்சித் தலைமை.
இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக இருக்கிறது என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. இருப்பினும் ஆளுங்கட்சியான தவெக-விற்கும், அதிமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், இந்த இடைத்தேர்தலில் அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. முதல்வரே நேரடியாக பிரச்சாரத்திற்கு வருவதால், தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.