

கடந்தாண்டு மட்டும், உலகம் முழுவதும் செலவு குறைப்பு நடவடிக்கையாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை, முன்னணி ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளது.
2026 ஏப்ரல் நிலவரப்படி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால், ஆரக்கிள் (Oracle) நிறுவனம் உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களையும், இந்தியாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோரையும் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. டிசிஎஸ், அமேசான், கூகுள், மெட்டா (Meta), மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பணிநீக்க நடவடிக்கைக்கு, AI தொழில்நுட்பத்தின் எழுச்சி, செலவுக் குறைப்பு, செயல்பாட்டு மறுசீரமைப்பு (Restructuring) மற்றும் AI உள்கட்டமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. பல அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் மேலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஐடி துறை மட்டுமின்றி, கேமிங் (Take-Two Interactive), தொலைத்தொடர்பு (Nokia, T-Mobile) போன்ற துறைகளிலும் பணி நீக்கங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு பாதுகாப்பில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
இப்படி உலகளவில் பரந்து விரிந்துள்ள பெரிய, பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களிடம் வேலைபார்க்கும் பணியாளர்களை கௌரவித்து பரிசுகளை வழங்கி வருகின்றன.
அதேபோல் இந்தியாவில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் வெகுமதிகளும் மாறி வருகின்றன. சமீப காலமாக நிறுவனங்கள் வழக்கமான போனஸ்களுக்குப் பதிலாக, அதிக மதிப்புள்ள, உறுதியான ஊக்கத்தொகைகளை வழங்குவது அதிகரித்து வருகின்றன.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய refex group என்ற நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு கிட்டத்தட்ட 23 ஆண்டு காலமாக பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
பொதுவாக தங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிறுவனங்கள் தங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு கொடுக்கும். அல்லது பண்டிகை காலங்களில் பரிசுகளை கொடுப்பார்கள். ஆனால் refex group நிறுவனம் ஆண்டுதோறும், அந்நிறுவனத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது நீண்டகாலமாக வேலைசெய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளது.
அந்த வகையில் இந்நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் நீண்டகாலமாக வேலைபார்த்த 12 ஊழியர்களை தேர்தெடுத்து Wheel of achievement என்ற பெயரில் ரூ.46 லட்சத்திலிருந்து 56 லட்சம் வரை விலை கொண்ட ஆடி ஏ4 ரக கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை, நீண்ட காலம் பணியாற்றும் மற்றும் சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு உறுதியான, உயர்வான பலன்களை வழங்கும் ஒரு பரந்த போக்கைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் கார்கள் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டும் அல்ல, மாறாக காலப்போக்கில் தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “சாதனைச் சக்கரம்” (Wheel of achievement)என்று அழைக்கப்படும் இந்த முன்னெடுப்பு, நீண்டகாலப் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீடியோவில் வரிசையாக ஆடி கார்கள் நிற்பதும், ஊழியர்கள் பரிசு பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.
கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஆடி கார் வழங்கி இருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.