

சொத்து வரி விகிதங்களில் மாற்றம் இல்லை; அதாவது எந்த உயர்வும் இல்லை என்றும், இது தொடர்பாக பரவி வரும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுவான சொத்துவரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது தவறான விபரங்கள் அளிக்கப்பட்ட சில கட்டிடங்களுக்கு மட்டுமே முறையான திருத்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரியை உயர்த்துவது அல்ல, மாறாக நில அளவீட்டுத் திருத்தமாகும்.
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரவும் உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி பணியிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகின்றது. சொந்த வீடு, கட்டிடம், வணிக வளாகம் வைத்திருப்பவர்கள் சொத்துவரி செலுத்த வேண்டும். இது சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது 5000 ரூபாய் வரி கட்டிய உரிமையாளருக்கு தற்பொழுது 28,000 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பரவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில், திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள் இதன் மீது ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்திட வாய்ப்பளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பாக வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்வதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
புவியியல் தகவல் அமைப்பு(GIS) வரைபடம், செயற்கைக்கோள் தரவு, பிற அரசாங்கப் பதிவுகள் மற்றும் உரிமையாளர்கள் தாங்களாகவே வழங்கிய சுய அறிவிப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி பரப்பளவு வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளை எதிர்த்து சொத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஜி.சி.சி (Greater Chennai Corporation -G.C.C) ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளவர்கள், அறிவிப்பைப் பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வரி உயர்வு குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆணையர் பொதுமக்களை வலியுறுத்தியதுடன், தற்போதைய இந்த நடவடிக்கை துல்லியமான மதிப்பீட்டையும், வருவாய் முறைப்படுத்தலையும் உறுதி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.