

மெரினா கடற்கரையில் குப்பைகளை கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெரினா கடற்கரை சென்னைவாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு பிரபலமான பொழுதுபோக்கு இடமாகும். கண்ணும், மனதிற்கும் விருந்து படைக்கும் மெரினா, சென்னையில் மக்கள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மனம் மகிழும் இடமாகவும் இது இருக்கிறது.
சென்னையில் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை நீலக்குடி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருவதுடன், சர்வதேச தரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய முககியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொறுப்பாகும்.
நாம் உபயோகிக்கும் தண்ணீர் பாட்டில்கள், நொறுக்குத்தீனி பாக்கெட்டுகள் கடலுக்குள் சென்று மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Solid Waste Management Rules, 2016)படி பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள் பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப்பொருட்கள் எச்சங்கள் உள்ளிட்ட எந்த விதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பாக மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் சுத்தம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்ப்டடு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாக்கரை, திருவெற்றியூர் கடற்கரை பகுதிகளிலும் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுகிறது. குறிப்பாக கடற்கரையில் வைத்துள்ள குப்பை தொட்டிகளில் கழிவுகளை போடாமல் பொதுமக்கள் திறந்த வெளியில் வீசுகின்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போதும் மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 50 டன் அளவில் குப்பை மாநகராட்சியால் அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்னும் மூன்று தினங்களில் வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவார்கள்.
கடற்கரையும் தூய்மையையும், அழகையும் பாதுகாக்கும் பொறுட்டு பொதுமக்கள் சமூக பொறுப்புடன் குப்பை குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போடுவது நல்லது. இதனால் தூய்மை பணியாளர்களின் பணி குறைவதுடன், கடற்கரையும் சுத்தமாக இருக்கும்.
இதனை மீறி மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் குப்பை கொட்டுபவர்கள் மீது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.