

சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடிகளில் 835 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே இந்த முறை கூடுதல் துணை ராணுவ படை பணி அமர்த்தப்பட இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம்தேதி முதல் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இடையில் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பதை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதிப்படுத்தி உள்ளார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 என்றும் அவர் கூறினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 80 சதவீதம் வாக்குப்பதிவை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கையில் தமிழக தேர்தல் ஆணையம் களமிறங்கியிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலர் குமரகுருபரன் கூறினார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 4079 வாக்குச்சாவடிகள் உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்களின் முதல்கட்ட ஆய்வு நடந்து முடிவடைந்துள்ளது. ஓரிரு நாட்களில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் 16 தொகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தகட்டமாக அந்த எந்திரங்கள் அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு(SIR) பின்னர் சென்னையில் 28.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் 835 சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுத காவல் படைகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவின் போது அவை நேரடியாக கண்காணிக்கப்படும்.
பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக அவர் கூறினார். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் தியாகராயநகர், ஆயிரம் விளக்கு ஆகியவற்றிலேயே குறைந்த அளவு வாக்குப்பதிவு கடந்த காலங்களில் பதிவாகியிருக்கின்றது. இம்முறை அதற்கு அதிக கவனம் செலுத்தி வாக்குப்பதிவு அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
சென்னையைப் பொருத்தவரை வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் மாநில அளவில் குறைந்த அளவில் காணப்படுகிறது. குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 75 முதல் 80 சதவீதம் வாக்குப்பதிவை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.