

இந்தியாவில் பொதுமக்கள் பலரும் ரெயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளைக் காட்டிலும் இதில் கட்டணம் குறைவு. அதோடு சௌகரியமான பயணத்திற்கு ரெயில் போக்குவரத்து தான் ஏற்றது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் விரைவு ரெயில் என மூன்று பிரிவுகளாக ரெயில் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை நகர மக்களுக்கு விரைவான பயண அனுபவத்தை மெட்ரோ ரெயில் தொடர்ந்து வழங்கி வருகிறது.
மின்சார ரெயில் கட்டணத்தைக் காட்டிலும் மெட்ரோ ரெயிலில் பயணிக்க கட்டணம் அதிகம். ஆகையால் நடுத்தர மக்கள் பலரும் மெட்ரோ ரெயில் பக்கம் செல்லவே இல்லை. விரைவான பயணத்தால் பயணிகளின் நேரம் மிச்சமாவதால், மெட்ரோ ரெயிலில் பயணிக்க போதுமான அளவு கூட்டம் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் மெட்ரோவில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்றாலும் விரைவான சேவையை வழங்குவதால் மக்களின் விருப்ப தேர்வாக உள்ளது என்றே சொல்லலாம். தற்போது சென்னை மெட்ரோவில் தினசரி சுமார் 3 முதல் 3.2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர்.
மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பெறும் வசதியும் இருப்பதால், பயணிகள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மெட்ரோ நிறுவனம், இன்னும் அதிகப்படியான பயணிகளை கவரும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டண சலுகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோவில் அதிக சத்தத்துடன் மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்றும் இதை மீறும் பயணிகள் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரெயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ ரெயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பாக செல்போனில் உரத்த குரலில் உரையாடுதல், காதில் Headphones போடாமல் இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, செல்போனில் மெட்ரோ ரெயில்களிலும், வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) போன்ற செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் செல்போனை பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இந்தச் சட்டத்தின்படி, சென்னை மெட்ரோ ரெயிலில் விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தேவைப்பட்டால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, மெட்ரோவில் பயணிக்கும் அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.