
சென்னை பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிலையில் 2025 மார்ச் மாதம் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் மாதவரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் பொதுமக்களும் பயணிகளும் விரைந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பறக்கும் ரயில்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
குறிப்பாக சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு இடையில் பறக்கும் ரயில் சேவை மிக முக்கிய சேவையாக உள்ளது. இந்த நிலையில் இந்த சேவையை விரிவுபடுத்த கடந்த 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் துவங்கப்பட்டது.
ஆனால் இந்த பணிகள் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் பறக்கும் ரயில் திட்ட பணிகளை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து கடும் சவால்களுக்கு இடையே நிலம் கையப்படுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு 2022 ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் வேளச்சேரி பரங்கிமலை இடையே 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பால ரயில் பாதை பணிகள் துவங்கப்பட்டு பெரிய தூண்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்து மீண்டும் பணிகள் தாமதமாயின.தற்போது பல சவால்களைத் தாண்டி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வேளச்சேரி பரங்கிமலை இணைப்பு பணி முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து வேளச்சேரி பரங்கிமலை ரயில் சேவை எப்போது தொடங்கும் என சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி பொது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.