

மூத்த குடிமக்களுக்கு பொதுப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் வகையில், ஜூலை முதல் டிசம்பர் 2026 வரை பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்வதற்கான புதிய டோக்கன்கள் ஜூன் 21-ம்தேதி முதல் ஜூலை 31-ம்தேதி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 39-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் (Depots) இந்த டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் வகையில், விடியல் பயண திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இதே போல சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளில், 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இலவசமாக பயணங்கள் மேற்கொள்ளலாம்.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இதற்கான கட்டணமில்லாப் பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் வழங்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், மொத்தம் 6 மாதங்களுக்கு தேவையான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இதனுடன், ஏற்கனவே உள்ள பயனாளர்களின் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு அடுத்த 6 மாத (ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரை) இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கும் தேதியை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை எவ்வித விடுமுறையுமின்றி அனைத்து நாட்களிலும் இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், அடுத்த 6 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய 60 கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான விநியோகம் வரும் 21.06.2026 முதல் 31.07.2026 வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 39 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலைய மையங்களில் நடைபெறும். தினமும் காலை 8.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை, விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் இந்த சேவையைப் பெறலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை சென்னை மாநகர எல்லைக்குள் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தேவையான ஆவணங்கள்:
இந்தக் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் மூத்த குடிமக்கள் அல்லது ஏற்கனவே உள்ள அட்டையைப் புதுப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
வயது சான்று: ஆதாரம், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கல்விச் சான்றிதழ்களின் நகல் (ஏதேனும் ஒன்று).
முகவரிச் சான்று: குடும்ப அட்டை (Ration card) நகல்.
புகைப்படம்: 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்.
இந்த ஆவணங்களை சமர்ப்பித்து சமர்ப்பித்து முதியவர்கள் டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பணிமனை நேரடி விநியோகம்:
சிறப்பு முகாம் காலம் நிறைவடைந்த பிறகு, (அதாவது 01.08.2026 முதல் 20.12.2026 வரை), வழக்கம்போல் மூத்த குடிமக்கள் அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பணிமனை அலுவலகங்களில், வழக்கமான அலுவலக நாட்கள் மற்றும் அலுவலக நேரங்களில் டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அடையாறு, திருவான்மியூர், தி. நகர், சைதாப்பேட்டை, அய்யப்பன்தாங்கல், குரோம்பேட்டை, வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், எண்ணூர், மாதவரம், தாம்பரம், பெரம்பூர், செம்மஞ்சேரி, கிளாம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 39 முக்கிய மையங்களின் பட்டியல் இதனுடன் இணைக்கப்பட்டு, விநியோகத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவம், அன்றாட தேவைகள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக அடிக்கடி பயணம் செய்யும் முதியோருக்கு இந்த இலவச பேருந்து பயண வசதி நிதிச்சுமையை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.