"உரிமையை பறிக்காதே!" - மத்திய அரசின் திருநங்கையர் சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு..!
2026 ஆம் ஆண்டின் திருநங்கையர் திருத்த மசோதா, 2019 ஆம் ஆண்டு சட்டத்தில் சுய-அடையாள உரிமைக்கு பதிலாக, மருத்துவக் குழுவின் சான்றிதழை கட்டாயமாக்க முன்மொழிகிறது. இந்த மசோதா திருநங்கைகளின் அடையாளத்தை மறுப்பதாகவும், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பது:
மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள திருநங்கைகள் திருத்தச் சட்ட மசோதா திருநங்கைகளின் உரிமையை பறிக்கும். திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.
பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்படும் ஒரு சட்டத்தை, அச்சமூகத்தைச் சேர்ந்த மக்களே எதிர்த்து நிற்கும் போது, அதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.திருநங்கைகளிடம் கருத்துக்களை கேட்காமல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. மத்திய பாஜக அரசு முன்னோக்கி செல்வதற்கு முன் சற்று நிறுத்தி, திருநங்கைகளுடன் கலந்துரையாடி ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக அது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

