

234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது முதல் அதிரடியான அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது. அதிலும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாக தவெக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்து ஒவ்வொரு நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே புகார்கள் குறித்து CM Helpline என்ற இணையதளத்தில் மூலம் தமிழக முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் இனிமேல் தங்கள் குறைகளை 1100 என்ற கட்டணமில்லா உதவி எண் வாயிலாகவோ அல்லது cmhelpline@tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ நேரடியாகத் தெரிவிக்கலாம்.
அதேபோல் விஜய் தலைமையிலான புதிய அரசு அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் லஞ்சத்தை வேரோடு ஒழிக்க போவதாக அதிரடி சபதம் எடுத்துள்ளது.
சட்ட விரோத மதுக்கடைகள் அகற்றப்படும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது வீடியோ எடுத்துக்கொள்ள வேண்டும், தன் பெயரை சொல்லி தவெக கட்சியினர் யாரும் அரசு அலுவலகங்களில் தலையிட கூடாது என்றெல்லாம் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவனத்தைப் பெற்றிருந்தது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசு நிர்வாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தப் போவதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதியளித்துள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை அடிமட்ட அளவில் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் எந்தவொரு அரசு அலுவலகத்திலும், வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட பொதுமக்கள் தயங்காமல் ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்களுடன் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு சரியான ஆதாரங்களுடன் புகார் அளித்து, ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பொதுமக்களுக்கு அரசு தரப்பில் இருந்து 1 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும், அவர்களது ரகசியம் காக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொதுமக்கள் தங்களின் புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக 1800 425 1555 என்ற கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பு, ஊழல் அதிகாரிகளின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாமானிய மக்கள் மற்றும் ஏழை எளியோரிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மறுபுறம், முதலமைச்சர் விஜய் எடுத்த இந்த முடிவு, இலஞ்சத்திற்குப் பழகிப்போன அரசு ஊழியர்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசு சார்பில் உறுதியான அறிக்கை ஏதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சமூக வலைதளம் மற்றும் சில ஊடகங்களில் மட்டுமே லஞ்சம் குறித்து புகார் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.