

தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்தை அடுத்து பொதுமக்கள் பேருந்து போக்குவரத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்தனர். இந்தத் திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு போதிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போதைய தவெக ஆட்சியிலும் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து துறையில் லாபத்தைப் பெருக்க பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்ற முதல்வர் விஜய் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் பேருந்து கட்டணம் உயரத்தப்படாது என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி பொதுமக்களின் சாலை பயணத்தை எளிதாக்க வேறு சில முக்கிய உத்தரவையும் முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் முதல்வர் விஜய் 300 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தினார். அப்போது மக்களுடன் மக்களாக முதல்வர் பயணித்தது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதோடு பேருந்தில் பயணிக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியதாக நடத்துநரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது, தமிழக மக்கள் அனைவரும் ஏசி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தெரிவித்தார் முதல்வர். இந்தத் தகவலை அமைச்சர் சில நாட்கள் கழித்தே பொதுவெளியில் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் சொனனது போலவே பொதுமக்களின் சாலை பயணத்தை எளிதாக்க புதிதாக 2,000 ஏசி பேருந்துகளை வாங்கவிருப்பதாக இன்று தெரிவித்துள்ளார். ஏசி பேருந்துகளை இயக்கினாலும், அதில் பேருந்து கட்டணத்தைக் உயரத்தக் கூடாது என்பதே முதல்வரின் முதல் உத்தரவு. அப்படியெனில் டீலக்ஸ் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் தான் இனி ஏசி பேருந்துகளிலும் வசூலிக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பயண அனுபவத்தை சிறந்ததாக மாற்ற முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
தற்போது இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 ஆக உள்ளது. முதல்வரின் இன்றைய அறிவிப்பின் மூலம் இந்தக் கட்டணம் குறையும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் வெளியிட்ட உத்தரவில், “பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல், போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும். 2,000 புதிய ஏசி பேருந்துகளை உடனடியாக வாங்க வேண்டும். ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தாலும் டிக்கெட் கட்டணத்தை மட்டும் உயர்த்தக் கூடாது. பேருந்துகளில் விளம்பரங்கள் செய்து வருவாயை பெருக்க வேண்டும்” என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
சமீபத்தில் கேரள மாநிலத்திலும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை சமாளிக்க, டிக்கெட்டின் பின்புறம் விளம்பரங்களை அச்சிட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசும் பேருந்துகளில் மட்டுமல்லாது, டிக்கெட்டின் பின்புறமும் விளம்பரங்களை அச்சிடலாம். தற்போது டிக்கெட்டின் பின்புறம் தமிழக போக்குவரத்து துறையின் லோகோ அச்சிடப்படுகிறது. இதனை மாற்றி விளம்பரங்களை அச்சிட்டால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.