

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. நடப்பாண்டைப் பொறுத்தவரை செப்டம்பர் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 16,577 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உங்கள் வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், குணமாகும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் டெங்கு பாதிப்பு உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 244 பேருக்கு நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 156 பேர் நேற்று காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை மழைநீர் தேங்கினால், அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்:
* இருமல், சளி மற்றும் சுவாசத் தொற்று உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கூட கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
* காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் அதிகம் உற்பத்தியாகும். ஆகையால் வீட்டில் உள்ள நீர்நிலைத் தொட்டிகள் மற்றும் தேவையற்ற இடங்களில் மழைநீர் தேங்கினால், உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும்.
* வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
* தண்ணீர் தேங்கும் இடங்களுக்கு குழந்தைகளை செல்ல அனுமதிக்க கூடாது.
* குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் காய்ச்சல் குணமாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது.