

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20-ம் தேதி சர்வதேச சதூரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இன்று சதுரங்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சதூரங்க விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் ‘பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE - International Chess Federation)’ நிறுவப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை சர்வதேச அளவில் கௌரவிக்கும் விதமாக, 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ம் தேதி சர்வதேச சதுரங்க தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சதுரங்க விளையாட்டின் மூலம் உலகளவில் மக்களிடையே ஒத்துழைப்பு, நட்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதே இந்த நாளின் மிக முக்கிய நோக்கம். அதோடு சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் கொண்டு செல்வதையும் இந்த தினம் உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உலகத் தரத்திலான சதுரங்க வீரர்களுக்குப் பஞ்சமே இல்லை. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் வரை பல சிறப்பான வீரர்கள் உலகளவில் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில் “உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.
1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, திரு. குகேஷ், திரு. பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
சதுரங்கம் என்பது வெறுமென அதிர்ஷ்டம் அளிக்கும் விளையாட்டு மட்டும் அல்ல; இது ஓர் அறிவுப்பூர்வமான மற்றும் நுணுக்கமான சிந்தனைகளைத் தூண்டும் மிகச் சிறந்த உள்ளரங்க விளையாட்டாகும்.
தமிழ்நாட்டில் எண்ணற்ற சதுரங்க வீரர்கள் உலக அரங்கில் வெற்றிக் கொடி நாட்டுவது, நம் அனைவருக்குமே பெருமையான விஷயமாகும். உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகளுக்கு மத்தியில் தனிநபர் விளையாட்டுகளில் தமிழர்கள் சிறந்து விளங்குவது அசாத்தியமானது.
இந்நிலையில் சர்வதேச சதுரங்க தினத்தில், வீரர்களுக்கு உதவும் வகையில், ‘தமிழக அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்’ என முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். முதல்வரின் இந்த வாக்குறுதி மேலும் பல சதுரங்க வீரர்கள் தமிழ்நாட்டில் உருவெடுப்பதற்கான பாதையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.