

காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த சூழலில், காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டிகள் நைஜீரியாவில் நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கனக லட்சுமி என்ற வீராங்கனை தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்தத் தொடரில் 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கேற்று பதக்கங்களை வென்றனர். தடகளம், டிராக் சைக்கிளிங், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் ஜூடோ உள்ளிட்ட 10 வகையான விளையாட்டு போட்டிகள் காமன்வெல்த்தில் நடந்தன. இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்தது.
இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர்.
1. முத்துப்பாண்டி ராஜா - வெள்ளிப் பதக்கம் (65 கிலோ பளுதூக்குதல்)
2. பிரவீன் சித்ரவேல் - வெள்ளிப் பதக்கம் (தடகளம் - டிரிபிள் ஜம்ப்)
3. செல்வ பிரபு - வெண்கலப் பதக்கம் (தடகளம் - டிரிபிள் ஜம்ப்).
2026 காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டி நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் நேற்றுடன் முடிந்தது. இந்தப் போட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியா 35 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றது.
23 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் மூத்தோர் பிரிவு என அனைத்துப் பிரிவுகளின் கீழும் இந்தியா மொத்தம் 35 பதக்கங்களைக் குவித்துள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கனக லட்சுமி என்ற இளம்பெண் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
வரலாற்றுச் சாதனை:
காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா ‘வில்கின்சன் ஸ்வார்ட் டிராபி’ என்ற விருதை வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. 1982 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் வாள்வீச்சுக் கூட்டமைப்பால் வழங்கப்படும் இந்தக் கோப்பையை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதன்முறை.
காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியின் கடைசி நாளான நேற்று (ஆகஸ்ட் 13) மூத்தோர் அணிகளுக்கான போட்டியில், இந்தியா ஆண்கள் ஈபீ, பெண்கள் ஈபீ, ஆண்கள் சேபர், பெண்கள் சேபர் மற்றும் பெண்கள் ஃபாயில் என 5 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனைப் படைத்தது. இதுதவிர ஆண்கள் ஃபாயில் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் இந்தியாவின் வசமானது.
தமிழ்நாட்டின் சிங்கப்பெண்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை கனக லட்சுமி, பெண்களுக்கான ஃபாயில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருடைய தந்தை பரஞ்சோதி, விறகு விற்பறை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் பிறந்தாலும், விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தால், இன்று சர்வதேச அளவில் சாதனைப் படைத்திருக்கிறார் கனக லட்சுமி.
காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக, தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு வாள்வீச்சுப் போட்டிகளில் எண்ணற்றப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார் கனக லட்சுமி. இவர் 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
கடினமான குடும்ப சூழலை எதிர்கொண்டு, விளையாட்டின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால், சர்வதேச அளவில் சிங்க நடைப் போட்டிருக்கிறார் கனகலட்சுமி. இவருடைய இந்த வெற்றி தமிழ்நாட்டுப் பெண்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.