
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியும், தனிய்ர் கல்லூரி கட்டணம் தொடர்பான விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளன.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு வருகின்ற ஜூலை 21இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூலை 21 முதல் 28 வரை தங்கள் விவரங்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மாணவர்களின் தரவரிசைப் பட்டியலின் படி, ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதனைத் தொடர்ந்து ஜூலை 31 இல் இறுதி ஒதுக்கீட்டு ஆணை மாணவர்களுக்கு வழங்கப்படும். பிறகு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதிக்குள் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாவது கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதியும், மூன்றாவது கட்ட மருத்துவக் கலந்தாய்வு செப்டம்பர் 22 ஆம் தேதியும் தொடங்கும் என அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கட்டணத்தை நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், ஆர்.பாலசந்திரன், டாக்டர் கீதாலட்சுமி மற்றும் கே.ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு இறுதி செய்துள்ளது. இதன்படி மொத்தமுள்ள 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான கட்டணம் ரூ.4.35 இலட்சம் முதல் ரூ.4.5 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 4 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.5.40 இலட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.16.20 இலட்சமும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு ரூ.30 இலட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.60,000 வரை மேம்பாட்டு நிதியாக மாணவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர்த்து வேறு எந்தக் கட்டணத்தையும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது. மேலும் பேருந்து, உணவு மற்றும் விடுதிக் கட்டணங்கள் இதில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, கல்லூரிகளின் கட்டணத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.