

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயாராக இருப்பதாக சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்பது குறித்து காலச் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்போம் என்றும், ஒருவேளை தனித்து போட்டியிடக்கூடிய சூழல் உருவானால் தனித்துக்கூடக் கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பு இருக்கிறது; எங்களுடைய மக்கள் பணியை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் தங்களின் உண்மையான பலத்தை அறிய வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் தயாராக இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தங்களது கூட்டணியின் நிலைப்பாடு மற்றும் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சியினுடைய கொள்கை முடிவுகளை தெளிவுபடுத்தி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுநர் மூலம் ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
அத்துடன் திமுக கூட்டணியில் இடதுசாரிகள் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இத்தகைய சூழ்நிலையில் இடதுசாரி கட்சியின் உண்மையான பலத்தை அறிய வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாகவும், எனவே வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இன்னும் உறுதியாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல் காரணமாக திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அண்மையில் தெளிவுபடுத்தியிருந்த அவர், இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) மற்றும் சிபிஐ எம்.எல் (CPI-ML) ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து 'இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு' ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தேர்தலுக்கான குழு அல்ல, தமிழக நலனுக்காக போராடுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு. இது தேர்தல் கூட்டணி அல்லாமல், தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் வரும் நேரங்களில் அவரவர் கட்சியில் கூடி முடிவு செய்வோம் என்றும், தேவை ஏற்படுகிற பொழுது ஒருங்கிணைந்து முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனித்து நிற்கக்கூடிய சூழல் உருவானால் தனித்து கூட கம்யூனிஸ்ட் கட்சிகளால் நிற்க முடியும் என்றவர் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகியவற்றை ஜனநாயக சக்திகளாகவே கருதுவதாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) மட்டுமே தங்கள் கொள்கை எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் ஆகியவை ஒருபோதும் ஏற்புடையதல்ல. அது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பல கட்சிகள் இயங்கும் முறையைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கும். மேலும், மக்கள் மத்தியில் அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை உருவாக்கும். எனவே, அவரவர் கொள்கை வழியில் நின்று அரசியல் செய்வதே தார்மீகக் கடமை என்று கருதுவதாக மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.