110 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய் விலை.! சாமானியர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து.!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியுள்ளது.
உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் கச்சா எண்ணெயில் 80%, ஹார்மூஸ் நீரிணை வழியாகத் தான் அனுப்பப்படுகிறது. தற்போது இந்த நீரிணை மூடப்பட்டு இருப்பதால், கச்சா எண்ணெயின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டும் என அன்றே கணிப்புகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு 100 டாலரை எட்டியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த வாரம் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்த்தப்படவில்லை. அடுத்த 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கைவசம் இருப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும் அடுத்த 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ள இந்தியாவிற்கு, அமெரிக்கா அனுமதி அளித்திருந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் போர் அதிக நாட்களுக்கு நீடித்தால் விலை உயரும் அபாயம் ஏற்படுவது உறுதி.
தற்போது அமெரிக்காவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 18% உயர்ந்து, 110 டாலரை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 100 டாலரை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மேலும் போர் தொடர்ந்து நீடித்தால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 150 டாலர்களை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலில் போர் முடிவுக்கு வருவது ஒன்றே, எரிபொருள் தட்டுப்பாட்டை தடுப்பதற்கான ஒரே வழி. ஆனால் ஈரான் முழுமையாக சரண் அடைந்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அவசர கால சூழலில் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அமெரிக்கா 415 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை பிரம்மாண்ட குகையில் சேமித்து வைத்துள்ளது. தற்போதைய சூழலில் இந்த கச்சா எண்ணெயை விடுவித்தால் உலக நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டது.
ஆனால் எங்களிடம் உள்ள அவசர கால தேவைக்கான கச்சா எண்ணெயை உலக சந்தையில் விடுவிக்கும் எண்ணம் தற்போது இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

