

அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 19 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 90 ஆய்வுகளின் ஒருங்கிணைந்த முடிவுகள், சைக்கிள் ஓட்டுதல் என்பது மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான (எடுத்துக்காட்டாக, மனநிலையைச் சீராக்குதல் மற்றும் அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம்) ஒரு பயனுள்ள வழி என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், சைக்கிள் ஓட்டுவதை அன்றாட பழக்கமாக்குவது உடல், மன ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இருப்பதை காட்டுகின்றன. இயற்கை வெளிச்சத்தில் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது மனநிலையை மேம்படுத்தி, சமூக உறவுகளை வலுப்படுத்தி, மூளை செயல்பாடுகளை தூண்டுகிறது; பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
ஃபிரான்டியர்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அண்ட் ஆக்டிவ் லிவிங் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புகள், சைக்கிள் ஓட்டுதல் - குறிப்பாக வெளிப்புறங்களில் இயற்கை வெளிச்சத்தில் ஓட்டுவது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
வழக்கமாக தினமும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், மறதி நோயின் அபாயத்தை 19% வரையிலும், அல்சைமர் நோயின் அபாயத்தை 22% வரையிலும் குறைக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், இது மூளையின் மைய நினைவகமான ஹிப்போகேம்பஸின் அளவை அதிகரிப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த எளிய உடற்பயிற்சி புதிய மூளை செல்களை உருவாக்கவும், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.
மேலும், இது மனிதர்களின் கவனிப்புத்திறன், சுறுசுறுப்பு மற்றும் மூளையின்செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இருப்பினும், மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவதே மூளைக்கு நல்லது என்றும், மிகக் கடுமையான உடற்பயிற்சி தற்காலிகமாகச் சோர்வை ஏற்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தினமும் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது அறிவாற்றல் (Cognitive function) செயல்பாடுகளைத் தூண்டி, கவனிப்புத்திறனை அதிகரிக்கிறது. சைக்கிள் ஓட்டுதல் எண்டோர்பின் (Endorphins) மற்றும் டோபமைன் (Dopamine) போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி, மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல மனநிலையைத் தருகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவது வயதான காலத்தில் ஏற்படும் டிமென்ஷியா (Dementia) போன்ற நரம்பியல் குறைபாடுகளின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.
நீங்கள் 3 வயதிலிருந்தே மிதிவண்டி ஓட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நீங்கள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு, அதை உங்கள் உடற்தகுதியை மேம்படுத்த ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்.
இது ஒரு சிறந்த ஏரோபிக் (Aerobic) பயிற்சியாகும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் சைக்கிள் ஓட்டுவதால் கால்கள், இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அடிவயிற்று கொழுப்பைக் கரைக்க இது பெரிதும் உதவும்.
நடைப்பயிற்சி (walking) மற்றும் ஓடுவது போன்ற உடற்பயிற்சிகளை விட, சைக்கிள் ஓட்டுவது மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தையே (low impact) உருவாக்குகிறது.
நடைமுறையில், பள்ளிக்கும் செல்லும் போதும், நண்பர்களுடன் குழு சவாரிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் நிலையான சைக்கிள் ஓட்டுதல் மற்றும் சுறுசுறுப்பான பயணங்கள் போன்ற பல வடிவங்களில் சைக்கிள் ஓட்டுதல் இருக்கலாம், இவை அனைத்தும் அன்றாட வாழ்வில் மன நலத்தையும் மூளை ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், அவுட்ரைட் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி மேலாளருமான லாரன் ஷக் கூறினார்.
பள்ளிப் பருவத்தினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சைக்கிள் ஓட்டுவதை ஒரு வழக்கமாக மாற்றிக்கொள்வது ஒட்டுமொத்த உடல் மற்றும் மனஆரோக்கியத்துக்குச் சிறந்தது என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.