

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய மூன்றின் விலையும் ஒரே நாளில் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக மாதந்தோறும் ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.
அவ்வகையில் கடந்த மாதம் வணிக சிலிண்டருக்கான விலை சுமார் 950 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. இதனால் வணிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று ஜூன் 1-ம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.45.50 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனையாகிறது.
ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.928.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் நான்கு முறை வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் விலை உயர்வு ஒரு புறம் இருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில 11 பைசா உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் 10 பைசா அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.87-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.65-க்கும் விற்பனையாகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 7 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அத்தியாவாசிய பொருள்களின் விலை உயரும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக தற்போது சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஹோட்டல்களில் ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மேலும் உயர்த்தப்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்து செல்ல நாட்களுக்கு முன்பு பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை நாடினால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பேருந்து மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.