

இந்திய மக்களிடையே நிலையான வைப்புத்தொகைகள் (FD) திட்டங்கள் பல ஆண்டுகளாகவே பிரபலமாக உள்ளன. காரணம், உறுதியான வருமானம் மற்றும் பாதுகாப்பு. பல முதலீட்டு வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் மிகவும் பழமையான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும். இதில், நீங்கள் ஒரு மொத்தத் தொகையை, முன்னரே வரையறுக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். ஒரு நிலையான வைப்புத்தொகையில் வழங்கப்படும் வட்டி விகிதம், ஒரு பாரம்பரிய சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை விட கணிசமாக அதிகமாகும். உங்கள் நிலையான வைப்புத்தொகையின் காலம் முடிந்ததும், நீங்கள் அதை புதுப்பிக்கலாம் அல்லது உங்கள் அசல் மற்றும் வட்டியைத் திரும்பப் பெறலாம். வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள், குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை பல்வேறு FD திட்டங்களை வழங்குகின்றன.
இந்நிலையில் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் முறையில் ஏப்ரல் 1-ம்தேதி முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதாவது, 2026-ல் நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு தற்போது வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, FD வரம்பு மாற்றங்கள், புதிய விதிகள், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
2026 ஏப்ரல் 1-ம்தேதி முதல் புதிதாக வந்துள்ள வருமான வரித்துறை விதிகளின்படி FDல் வருடத்திற்கு ரூ.10 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதாவது இனிமேல் ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல்) ஒரு வங்கியில் மொத்தமாக ரூ. 10 லட்சத்திற்கு மேல் நிலை வைப்புத்தொகை (FD) முதலீடு செய்தால், அந்த வங்கி வருமான வரித்துறைக்கு (Income Tax Department) Statement of Financial Transactions (SFT) மூலம் தகவல் தெரிவிக்கும்.
வரி ஏய்ப்பிற்கான சாத்தியக்கூறுகளைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள SFT (நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கை) விதிமுறைகளின் ஒரு பகுதியாகவே இது அமைகிறது.
அதனை தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கு மேல் நீங்கள் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு, உங்கள் வருமான ஆதாரத்தை விளக்குமாறு வரித்துறையிடமிருந்து உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு பிறகு உங்கள் வருமானத்திற்கான கணக்கை சரியாக காட்டாத பட்சத்தில் உங்களுக்கு கூடுதலாக 84 சதவீதம் வரி விதிக்கப்படும். அதற்கு மேல் பெனால்டியும் (Penalty) போடப்படும்.
புதிதாக வந்துள்ள இந்த விதிமுறைகளின்படி, யாரெல்லம் புதிதாக நிலையான வைப்புத்தொகையில் (Fresh Fixed Deposit (FD)) ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும்.
ஒருவேளை நீங்கள் இதற்கு முன்பே நிலையான வைப்புத்தொகையில் ரூ.15 லட்சம் அல்லது ரூ.20 லட்சம் என எவ்வளவு அதிகமாக பணம் போட்டு வைத்திருந்தாலும் அதனை புதுப்பிக்கும் போது உங்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்பதையும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.