

கேஸ் மானியம் என்பது மத்திய அரசு வழங்கும் நிதி உதவியாகும். குறிப்பாக பிரதமரின் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெற்றவர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மேலும் மானியம் வரவில்லை என்றால், ஆன்லைனில் அல்லது LPG விநியோகஸ்தரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெறுபவர்களுக்கு வருடத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியம் அளிக்கப்படுகிறது. உங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் 300 ரூபாய் மானியத்தை பெற முடியும். பெரும்பாலான அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற, ஆதார் அட்டையை வங்கிக் கணக்கு மற்றும் சேவையுடன் இணைப்பது அவசியமாகிவிட்டது. மேலும் மானியம் பெறுவதற்கு உங்கள் வங்கிக் கணக்கு NPCI (National Payments Corporation of India) உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைத்து, அதே ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தால், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
எல்பிஜி இணைப்பை ஆதார் உடன் இணைக்க, ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் இலவச கால்சென்ட்டர் என மூன்று எளிய வழிகள் உள்ளன.
ஆன்லைன் முறை:
முதலில், உங்கள் எல்பிஜி வழங்குநரின் (Indane, HP, Bharat)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் கேஸ் வழங்குநரின் இணையதளத்திற்குச் சென்று, 'Link Aadhaar' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இந்தச் செயல்முறையின் மூலம், நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆதார் இணைப்பைச் செய்து, மானியத்தைப் பெறலாம்.
ஆஃப்லைன் முறை:
உங்கள் எல்பிஜி வழங்குநரின் இணையதளத்தில் இருந்து படிவம் 2ஐ (Form 2) பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார் அட்டையின் நகலை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சரிபார்த்த பிறகு, உங்கள் எல்பிஜி இணைப்பு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
தொலைபேசி மையம் (Call Center) முறை:
உங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லா எண் 1800-2333-555க்கு போன் செய்து IVR (Interactive Voice Response) அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆதார் இணைப்பிற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் எல்பிஜி ஐடி மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு முடித்த பிறகு ஆதார் உங்கள் எரிவாயு இணைப்புடன் இணைக்கப்படும்.
மானியம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்றால் நீங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். அப்படி தெரியாதவர்கள் உங்கள் கேஸ் ஏஜென்சியின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புகார் அளிப்பதன் மூலம் உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, மானியம் வராததற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவார்கள்.