

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால், இன்று தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது, அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின்னர் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் பொதுச் செயலாளர் ஆனேன்.
திமுகவில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டும் தான் அந்தக் கட்சிக்கு தலைவராக முடியும். அதுபோல அந்த கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே முதலமைச்சராக இருக்க முடியும்.
அதிமுக அப்படி அல்ல, சிலுவம்பாளையத்தில் பிறந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது. இன்று திமுக கட்சி ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. அது கட்சி அல்ல ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முதலாளிகள் மாறி மாறி வருவார்கள்.
முதலில் கருணாநிதி வந்தார் பின்னர் அவர் மகன் ஸ்டாலின் வந்தார், தற்போது உதயநிதி வருவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் , வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் , என்று எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தில் பேசினார்.