எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
உலகின் இரண்டாவது பணக்காரர் எலோன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயரிட்டார். இவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2002ம் ஆண்டு எலோன் மஸ்க்கால் நிறுவப்பட்டது. 2012 இல், ஸ்பேஸ் எக்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பியது. 2015 இல், ஸ்பேஸ் எக்ஸ் முதல் முறையாக ஒரு சுற்றுப்பாதை ராக்கெட்டை தரையிறக்கியது. 2020 இல், ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது.
அதேபோல் இந்தியாவின் கனமான செயற்கைகோளை விண்ணில் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாடியிருக்கிறது. விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட்டை தயார் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
இப்படி பல சாதனைகளையும், இலக்குகளையும் கொண்டதுதான் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
அந்தவகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் மேத்யூ ஊமென் கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், அவர்களின் அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் ஜியோவின் நோக்கம். ஸ்பேஸ்எக்ஸ் உடனான இந்த கைக்கோர்ப்பு மூலம் ஸ்டார்லிங்கை இந்தியாவுக்குள் கொண்டு வருவதன் வழியாக எங்களுடைய உறுதிப்பாடு வலிமை பெறுகிறது.” என்றார்.
ஏர்டெலின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல், “இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஸ்டார்லிங்க் இணைய சேவைகளை வழங்குவது என்பது குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல். இதன்மூலம் இந்தியாவில் இந்தியாவில் கிராமப்புற, மலைப் பகுதிகளில் கூட அதிவேக இணைய சேவையை வழங்க முடியும். தனி நபர் முதல் தொழில்புரிவோர் வரை அனைவருக்கும் பொதுவான இணைய சேவைகளை வழங்குவதே எங்களின் நோக்கம்.” என்று பேசினார்.