

தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி விஜய் பதவி ஏற்ற போது, அவர் கையெழுத்திட்ட மூன்று முக்கிய கோப்புகளில் முக்கியமானது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் தொடக்க விழா கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் ஐஜி-யாக கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 2,500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் விரைவில் வெளியாகும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்கப்பெண் அதிரடிப் படைத் திட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வெளிநாட்டு பாணியில் புதுவிதமான உடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர தேவைகளின் போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டத்தை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் உதவி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு முழுக்க பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி கல்வி நிறுவனங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து ரோந்துப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரை தொடர்பு கொள்ள உதவி எண்ணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதன்படி ஆபத்து மற்றும் அவசர காலங்களில் 1091 என்ற உதவி எண்ணை பெண்கள் மற்றும் குழந்தைகள் அழைக்கலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் செயல்திறனை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண்கள் எப்போதும் களத்தில் இருப்பார்கள்.
ஆபத்து காலங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடர்பு கொள்ள 1091 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இந்த எண்ணை பெண்கள் அழைத்தவுடன், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்கள் காவல் உதவி எளிதாகவும் மற்றும் விரைவாகவும் அணுக இந்த உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதல் முயற்சியாகவே தற்போது உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பில் முழுகவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த உதவி எண் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்பதால், விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பெண்கள் பாதுகாப்பில் சமரசமே செய்ய மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடர்பு கொள்ள தனது பிறந்தநாளில் உதவி எண்ணை அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.