

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் ஜூன் 5ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2,81,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கூடுதல் அவகாசத்தை வழங்கியிருக்கிறது பொறியியல் மாணவர் சேர்க்கை குழு.
மே 3 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு நேற்று மாலை வரை 2,81,502 பேர் இதுவரை மொத்தமாக பொறியியல் படிப்பிற்கு சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் கடந்த ஒரு மாதமாகவே மிகவும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வந்தனர். தினமும் சராசரியாக 5,000 முதல் 20 ஆயிரம் பேர் வரை போட்டி போட்டுக் கொண்டு ஆன்லைனில் தங்களது விவரங்களை பதிவு செய்தனர். இவர்களில் 2,17,627 பேர் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.
கட்டணம் செலுத்திய மாணவர்களில் 1,84,053 பேர் தங்களது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை வெற்றிகரமாக இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர். விண்ணப்ப பதிவு நாளை முடிவடையும் நிலையில், சான்றிதழ்கள் மற்றும் விடுபட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பித்து பதிவேற்றம் செய்ய வரும் ஜூன் 5ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, இறுதியான பொதுத் தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அதிகாரப்பூர்வமாக எப்பொழுது தொடங்கும் என்பது குறித்த விரிவான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து இந்த ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.