

EPFO-ன் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்(EPFO) இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் (System Migration) நடைபெறுவதால், இன்று முதல் (ஜூன் 26-ம்தேதி) ஜூன் 30-ம்தேதி வரை பிஎஃப் (PF) ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது.
EPFO தனது டிஜிட்டல் அமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தலை மேற்கொள்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது, பல ஆன்லைன் சேவைகள் இன்று முதல் (ஜூன் 26) ஜூன் 28-ம்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது. எனவே, வருங்கால வைப்புநிதியிலிருந்து பணம் எடுக்கவோ, முன்பணம் பெறவோ அல்லது பிற கோரிக்கைகளைச் செயல்படுத்தவோ வேண்டிய ஊழியர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
எதிர்கால சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக EPFO தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த மேம்படுத்தும் செயல்பாட்டின் போது உறுப்பினர்கள் சில தற்காலிக சிரமங்களை அனுபவிக்க நேரிடலாம். தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அந்த அமைப்பு உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மூன்று நாட்களுக்கு கோரிக்கைகள் சமர்ப்பித்தல் (Claim submissions) மற்றும் செயலாக்கம் (Processing) முழுமையாக நிறுத்தப்படும். இதனால் உறுப்பினர் தளம், முதலாளி தளம், UMANG செயலி, PF பணம் பெறும் விண்ணப்பம், ECR தாக்கல் மற்றும் e-Passbook போன்ற முக்கியச் சேவைகள் பாதிக்கப்படும். இந்த நாள்களில் அவசர உதவி தேவைப்படுவோர் EPFO அழைப்பு மைய எண்ணான 14470-ஐத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை வழங்கலை மேம்படுத்தவும், செயலாக்கத் திறனை அதிகரிக்கவும், சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்கவும், கோரிக்கை செயலாக்க அமைப்பிற்கான தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளின் மேம்படுத்தல் பணிகளை EPFO மேற்கொண்டு வருகிறது என்று அந்தச் சட்டப்பூர்வ அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, EPFO வழங்கிய தகவலின்படி, இன்று (ஜூன் 26) நள்ளிரவு 12:00 மணி முதல் ஜூன் 28-ம்தேதி இரவு 11:59 மணி வரை EPFO இணையதளம் வழியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் மற்றும் செயலாக்குதல் ஆகியவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மாற்றங்களைத் தொடர்ந்து சேவைகளின் வேகம் மற்றும் தரம் இரண்டையும் மேம்படுத்துவதை EPFO நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின்படி, ஜூன் 29-ம்தேதி முதல் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும்.
அதாவது ஜூன் 26-28-ம்தேதிகள் வரவிருக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26 மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை தினமாகும். 27-ம் தேதி 4-வது சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமை பொதுவாக விடுமுறை தினம் என்பதால் இந்த நாட்களில் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
EPFO இணையதள சேவைகள் முடக்கத்தால் பின்வரும் சேவைகள் பாதிக்கப்படலாம்:
* கணக்கு விவரப் புத்தகத்தை (passbook) பார்வையிடுதல்,
* ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்களின் கோரிக்கைகள் (claims),
* இபிஎஃப் (EPF - Employees' Provident Fund) கணக்கு இருப்பை ஆன்லைனில் தெரிந்துகொள்ளுதல் மற்றும், பிற இணையவழித் தேவைகள் தொடர்பான சேவைகள் பாதிக்கப்படலாம்.
இணையதளம் முடங்கியிருக்கும் இந்த நாட்களில் உங்களின் அவசரத் தேவைகளுக்குக் கீழே உள்ள மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்:
இணையதளம் மூடப்பட்டிருக்கும் போது, உறுப்பினர்கள் தங்கள் கணக்குத் தகவல்களை அணுக மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம். உமாங் செயலி, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மிஸ்டு கால் சேவைகளைப் பயன்படுத்துமாறு EPFO பரிந்துரைக்கிறது.
* UMANG செயலி (App): மொபைல் போனில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பிஎஃப் தொடர்பான சேவைகளைப் பெறலாம்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் (Missed Call)கொடுத்து உங்களின் கணக்கு விவரங்களை அறியலாம்.
* EPFO வழங்கும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது எஸ்எம்எஸ் (SMS) சேவைகளைப் பயன்படுத்தலாம்.
* உதவிக்கு EPFO அழைப்பு மைய எண் 14470-ஐ தொடர்பு கொள்ளலாம்.
EPFO கடந்த சில ஆண்டுகளாகத் தனது டிஜிட்டல் சேவைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தற்போதைய அமைப்பை மேம்படுத்துவது, கோரிக்கை தீர்வு செயல்முறையை விரைவுபடுத்தும் என்றும், உறுப்பினர்களுக்கு ஒரு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை வழங்கும் என்றும் அந்த அமைப்பு நம்புகிறது.