

இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன, இது நகர்ப்புறங்களில் பயணத்தை மிகவும் சவாலானதாக மாற்றுகிறது. மக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நிற்பது மன அழுத்தம் மற்றும் கோபத்தை (road rage) உண்டாக்குகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மக்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த 'தி ஈ-பிளேன் கம்பெனி' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 'e200x' என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது. இந்த ஏர் டாக்ஸி அதிக நெருக்கடியான சாலைப் போக்குவரத்தில் சிக்காமல், வானத்திலேயே பறந்து சென்று மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படும் இந்த ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல 2 மணி நேரம் ஆகும் பட்சத்தில் அதுவே இந்த ஏர் டாக்ஸியில் பயணம் செய்தால் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா-வுடன் கைகோர்த்துள்ள 'தி ஈ-பிளேன் கம்பெனி' நிஜமாக ஒரு விமானத்தைச் செய்து அதை ஓட்டிப் பார்ப்பதற்கு முன்னால், கணினியிலேயே அந்த விமானத்தைப் போன்றே ஒரு "டிஜிட்டல் நகலை" உருவாக்கியுள்ளனர்.
சென்னையில் தயாராகும் இந்த ஏர் டாக்ஸி, நிஜமாக வானில் ஏறுவதற்கு முன்பே கணினி உலகில் பல கோடி மைல்கள் பறந்து, அனைத்துப் பாதுகாப்புகளையும் உறுதி செய்த பிறகுதான் நம் கைக்கு வரும். இந்தத் தொழில்நுட்பம் வெறும் சோதனையோடு நிற்காமல், விமானத்தின் பாகங்கள் எப்போது பழுதடையும் என்பதைக் கூட முன்கூட்டியே கணித்துச் சொல்லும் என்பதால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
இதில் eVTOL தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. e200x ஏர் டாக்ஸியின் இறக்கைகள் செங்குத்தாக மேலே எழும்பும்போது ஒரு விதமாகவும், காற்றில் வேகமாக முன்னோக்கிப் நகரும்போது ஒரு விதமாகவும் ஆற்றலைச் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
இதில் 6 செங்குத்து மோட்டார்கள் மற்றும் 4 முன்னோக்கிச் செலுத்தும் மோட்டார்கள் என மொத்தம் 10 மோட்டார்கள் உள்ளதால் ஒரு மோட்டார் பழுதடைந்தாலும் மற்ற மோட்டார்கள் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும். ஒருவேளை மிகப்பெரிய அவசரநிலை ஏற்பட்டால், முழு விமானத்தையும் பாதுகாப்பாகத் தரையிறக்க பிரத்யேகப் பாராசூட் வசதியும் இதில் உள்ளது. என்விடியா (Nvidia) தொழில்நுட்பம் மூலம், வானில் பறக்கும் மற்ற பொருட்கள் அல்லது தடைகளை இது தானாகவே கண்டறிந்து விலகிச் செல்லும்.
இந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தேவையான முதற்கட்ட அனுமதிகளைப் பெற்றுள்ளதால் விரைவிலேயே இந்த ஏர் டாக்ஸிகள் வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பயணிக்க விலை அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் வேண்டாம். ஏனெனில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது ஓலா/உபேர் போன்ற பிரீமியம் காரில் செல்வதற்கு ஆகும் செலவை விட வெறும் 2 மடங்கு மட்டுமே அதிகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகரின் முக்கியப் பகுதிக்கு போக்குவரத்து நெரிசலை தாண்டி காரில் செல்வதற்கு 2 மணி நேரமாகும் என்றால், அதே இந்த ஏர் டாக்ஸியில் செல்வதற்கு வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.