

உலக அளவில் பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘Strike Out Snakebite’ என்ற அமைப்பு, உலகளவில் பாம்புக் கடி குறித்த ஆய்வுகளை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Strike Out Snakebite வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், “தினந்தோறும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் பாம்பு கடியால் உயிரிழக்கிறார். இது உலகளவில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாகும். சர்வதேச அளவில் ஆண்டுதோறும் பாம்புக் கடியால் 1.38 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இந்தியாவில் தான் நடக்கின்றன.
பாம்புக் கடி குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே இல்லாததும், இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பாம்புக் கடி பாதிப்பு என்பது சமூக சமத்துவமின்மையின் அடையாளமாகவும் இருக்கிறது. உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள், வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே என்ற நிலை இன்றும் நீடிப்பது வேதனை தரும் விஷயமாகும்.
இந்த நிலையிலிருந்து தப்பிக்க பாம்புக் கடி குறித்த விழிப்புணர்வுகளை உலக நாடுகள் விரைந்து எடுப்பதோடு, அனைத்து தரப்பு மக்களுக்கும் உயர் சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதும் அவசியம்” என இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
1. இந்தியாவில் பொதுவாக கிராமப்புறங்களில் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். குறிப்பாக விவசாய நிலங்களில் பாம்புகள் அதிகம் இருப்பதால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் விவசாயிகள் பாம்புக் கடியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள நீண்ட காலுறைகளை அணிந்து கொள்வது நல்லது.
2. வயல் வரப்புகளில் விவசாயிகள் நடந்து செல்லும் போது கம்பு அல்லது தடியால் தரையைத் தட்டிப் பார்த்துக் கொண்டே நடக்கலாம்.
3. வளர்ப்பு நாய்களுடன் வயலுக்கு நடந்து செல்வது பாதுகாப்பான உணர்வைத் தரும்.
4. புதர் நிறைந்த இடங்களில் பாம்புகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என்பதால், இம்மாதிரியான இடங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
5. இரவு நேரங்களில் நீண்ட தொலைவுக்கு அதிக வெளிச்சம் தரக் கூடிய டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்தலாம்.
ஒருவேளை பாம்பு கடித்து விட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான பாம்புக் கடிகளுக்கும் தற்போது விஷமுறிவு மருந்து கிடைக்கிறது.