

தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான கேள்விகளுக்கு இன்று முதலமைச்சர் பதிலளிக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது.
எனவே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமான அமைப்பாகும்.
சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எந்த அச்சமும் இடையூறும் இன்றி பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் உரிமை இல்லை என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்து இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு என்றார்.
மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும் என்பதே அரசின் லட்சியம். பெண்களை இழிவு செய்யும் முன் தங்கள் வீட்டில் உள்ள பெண்களை நினைத்து பார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்த்தி பேசக்கூடாது என்று முதலமைச்சர் கூறினார்.