

நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன்படி சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செல்லாத ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லுபடியாகும் மற்றும் சரியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது அவசியமாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க, விதிகளை கடுமையாக்க வேண்டும் என சமீபத்தில் முதல்வர் விஜய் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஹரியானாவில் ஓம் பிரகாஷ் என்பவர் கார் ஓட்டிய போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இந்த விபத்து நடந்த போது, ஓட்டுநரின் உரிமம் காலாவதியாகி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் காரணமாக, காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கணிணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரங்கள் தொலைந்து விட்டது எனக் கூறி, காப்பீட்டு நிறுவனம் ரூ.1.08 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தான் தற்போது செல்லுபடியாகாத ஓட்டுநர் உரிமம் இருந்தால், விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.கோடீஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது
Pay and Recover:
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ‘Pay and Recover’ முறையைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக காப்பீட்டு நிறுவனங்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கி விடும்.
பிறகு விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரிடம் இருந்து, காப்பீடு நிறுவனம் வழங்கிய முழுப் பணத்தையும் சட்டப்பூர்வமாக வசூலித்துக் கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிப்பிக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள், நாடு முழுவதும் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி தேதியை கவனிக்காமல் விடுவது, எவ்வளவு பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது இந்த வழக்கின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஆகையால் இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி உள்ளிட்ட விஷயங்களில் ஓட்டுநர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் காப்பீடு இருந்தாலும், அது பயனளிக்காமல் போய் விடும்.
சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கான தகுதியை அளிக்கும் ஆவணம் தான் ஓட்டுநர் உரிமம். ஆகவே, வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி தேதியை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்வது கட்டாயமாகும்.