

கர்நாடக மாநில உணவு பாதுகாப்புத்துறை (KSFDA) அதிகாரிகள், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Instamart) உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் நடத்திய சோதனையில் 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மற்றும் தவறான தகவல்களை (relabelling) கொண்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூருவில் நடக்கவிருந்த 'பெப்டைட் பார்ட்டி' (peptide party) எனும் நிகழ்ச்சி தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில், அம்மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள், தேவனஹள்ளி மற்றும் அனேகல் பகுதியில் உள்ள அமேசான் உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்கிலும், ஹோஸ்கோடேவில் உள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்குகளிலும் சோதனை நடத்தினர்.
ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆன பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அதில், அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஏதும் இல்லாத ரூ.56 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள 'அமேசான் BLR6' என்ற சேமிப்பு மையத்தில் KSFDA அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு தவறான அல்லது போதுமான விவரங்கள் இல்லாத லேபிள் தொடர்பான விதிகளை பின்பற்றாத ரூ.14 லட்சம் மதிப்பு உணவுப்பொருட்களும், ரூ.10 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்களும், ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவை உரிய லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மடிவாலாவில் உள்ள 'அமேசான் BLR7' மையத்தில், ரூ.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான தவறான லேபிள் கொண்ட உணவுப் பொருட்களும், ரூ.13 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப்பொருட்களும், லைசென்ஸ் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த ரூ.1.57 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஹோஸ்கோடேவில் உள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டுக்குச் (Warehouse) சொந்தமான இடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றாமலும், அசுத்தமாகவும் செயல்பட்டதால் அந்த இடத்திற்குச் சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த ரூ.42 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆய்வின்போது லேபிள் விதிகளைப் பின்பற்றாத மற்றும் காலாவதியான ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், எச்பிஆர் லேஅவுட் (HBR Layout) பகுதியில் இயங்கிவந்த 'சப்தா பஜார்' (Saptha Bazaar) என்ற கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு காலாவதியான முந்திரி பிஸ்கட், ராகி மாவு, சிக்கன் பேட்டீஸ் (chicken patties), பன்னீர், குக்கீகள், நட்ஸ் (nuts), முட்டை மற்றும் மாவு வகைகள் என சுமார் ரூ.10,000 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, லிங்கராஜபுரம் பகுதியில் குளிர்பானங்கள், சாக்லேட்டுகள், இனிப்புகள், நெய் உள்ளிட்ட ரூ.56 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த இடத்திற்குச் சீல் வைக்கப்பட்டது.
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைக் குற்றவியல் குற்றமாக (criminal offence) அறிவிக்கக் கோரி, சட்டத் துறைக்கும் மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி வருகிறோம். தற்போது, இத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் அபராதம் மட்டுமே செலுத்தித் தப்பித்து விடுகிறார்கள்;
ஆனால் இது ஒரு தீவிரமான குற்றவியல் குற்றமாகும். எனவே, இதுபோன்ற விதிமீறல்களைக் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் புகார்களை அளிக்க முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் தெரிவித்தார்.