

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மொத்த 77 சுங்கச் சாவடிகளில் 66 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்குள் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது
அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ் குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை, வாணியம்பாடி உள்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணங்கள் செப்டம்பரில் திருத்தியமைக்கப்படும்.
இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக உயர்த்தவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் வசதியாக மாற்றுவதற்காக 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று FASTag வருடாந்திர பாஸ் திட்டம் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்காக பதிவுசெய்யப்பட்ட தனியார் வாகனங்கள், குறிப்பாக கார்கள் மற்றும் ஜீப்புகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன.
தற்போது, இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் சுங்கக் கட்டணங்களுக்கு FASTag வருடாந்திர பாஸைப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கத் தரவுகளின்படி, இதுவரை சுமார் 11.86 கோடி FASTagகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், கிட்டத்தட்ட 5.9 கோடி செயல்பாட்டில் உள்ளன மற்றும் நாடு முழுவதும் மின்னணு சுங்கக் கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, தேசிய நெடுஞ்சாலை கட்டண மையங்களில் சேகரிக்கப்படும் சுங்க வருவாயில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவை FASTag மூலம் செயலாக்கப்படுகின்றன. இது டிஜிட்டல் சுங்கச்சாவடிகளை பெரிய அளவில் மக்கள் ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது சுங்க கட்டண உயர்வால் மேலும் கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் ஒவ்வொரு லாரிக்கும் தற்போது கூடுதல் செலவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் தமிழகத்தில் காலாவதியான 36 சுங்க சாவடிகளை அகற்றினாலே ஓரளவுக்கு செலவு குறைந்து விடும். அதையும் இதுவரை அகற்றவில்லை. மேலும் சொந்த உபயோக்கத்துக்கு பயன்படுத்தும் கார்களுக்கு வழங்கப்படுவது போல் லாரிகளுக்கும் வருடாந்திர சுங்க சாவடி பாஸ் வழங்கினால் அதை வாங்கவும் தயாராக உள்ளோம். சுங்க கட்டண உயர்வை உயர்த்தக்கூடாது என்று பலமுறை நாங்கள் வலியுறுத்தியும், தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு லாரிக்கும் கூடுதல் செலவாகும் என்று கூறினார்.
சாலைகளின் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட சுங்கக் கட்டணம் நிரந்தரமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
வரும் ஏப்ரல் 1-ம்தேதி முதல் அமலுக்கு வரும் சுங்க சாவடி கட்டண உயர்வு காரணமாக தினசரி தேசிய நெஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மீது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். அதேசமயம் இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை உருவாகி உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்தே மக்கள் இன்னும் மீளமுடியாமல் தவிக்கும் நிலையில் மீண்டும் இன்னொரு அடியாக சுங்க கட்டண உயர்வு என்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.