

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும் வரும் ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆலோசித்து வருவதாக பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெரிவித்துள்ளது. இது நெடுஞ்சாலைகளை முழுக்கவும் மின்னிலக்கமயமாக்கும் திட்டத்தின் முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளின் நேரத்தையும் எரிபொருளையும் சேமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் அனைத்து சுங்கச்சாவடி கட்டணங்களும் FASTag மற்றும் UPI போன்ற டிஜிட்டல் முறைகளின் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த மாற்றத்தால் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் அதிகநேரம் நீண்ட வரிசைகள் நிற்பது குறையும் என்றும், எரிபொருள் சேமிக்கப்படும் என்பதுடன் பயண நேரமும் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக ஓட்டுநர்கள் பணத்தை எடுத்துக்கொடுக்கவும் மீதிச் சில்லறைக்காவும் காத்திருக்கத் தேவையிராது.
ரொக்கப் பணம் செலுத்தும் முறையை நிறுத்துவது மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF)முறைக்கு மாறுவதற்கான முதல் படியாகும். இந்தத் தொழில்நுட்பம் மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் போன்ற தடைகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
ஃபாஸ்டாக் மூலம் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த முடியும். தற்போது, பெரும்பாலான சுங்க பரிவர்த்தனைகள் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஃப்ரீக்வென்சி ஐடென்டிஃபிகேஷனில் (RFID) இயக்கப்பட்ட FASTag மூலம் மின்னணு முறையில் செயலாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர் FASTag உடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாக சுங்கக் கட்டணங்களைச் செலுத்த உதவுகிறது. FASTag இந்தியாவில் உள்ள அனைத்து NH சுங்கக் கட்டணச் சாவடிகள் மற்றும் 100 SH டோல் சாவடிகள் உட்பட 750 க்கும் மேற்பட்ட சுங்கக் சாவடிகளில் செயல்படுகிறது.
தற்போது FASTag கார்டுகள் இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக பயணம் செய்யும் போது நேரடியாக பணம் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தினால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில், சுங்கச்சாவடிகளில் 98 சதவீதம் நேரடியாக ஃபாஸ்ட்டேக் கார்டுகள் மூலமே கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாக NHAI வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் FASTag இல்லாத வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, பணம் ரொக்கமாக கொடுக்க முடியாது. ஒன்று டேக் பயன்படுத்த வேண்டும் அல்லது 1.25 மடங்கு அபராதத்துடன் UPI மூலமாக செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் FASTag இருந்தால் அதைப் பயன்படுத்தி மட்டுமே சுங்கச்சாவடியை கடக்க முடியும். அந்த அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு (2025) ஆகஸ்ட் மாதத்தில் ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.3,000 ரீசார்ஜ் செய்தால் இந்த ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.