கரீபியன் கடலில் இருக்கும் ஒரு குட்டி தீவான ஹைதி நாட்டில் தன்னுடைய மகன் இறப்பிற்கு மாந்திரீகம்தான் காரணம் என்று 200 பேரைக் கொன்று குவித்திருக்கிறார் ஒருவர்.
உலகெங்கிலும் பல இடங்களில் மாந்திரீகம் என்பது இருந்துதான் வருகிறது. உலகளவில் இருக்கும் பாதி மக்கள் இது ஒரு மூடநம்பிக்கை என்று கூறினாலும், அதே சரி பாதி மக்கள் இதனை முழுமையாக நம்பி வருகிறார்கள். இதில் எது உண்மை என்பதை ஆராய்வதைவிட இரு தரப்பினரின் நம்பிக்கையை கெடுக்காமல் ஒதுங்கி இருப்பதுதான் சரி என்று சில பேர் இருக்கின்றனர்.
அந்தவகையில் கியூபா, ஜமைக்கா அருகிலும், கரீபியன் கடலிலும் இருக்கும் ஒரு குட்டி தீவு நாடான ஹைதியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மிகவும் சிறிய நாடான இங்கு 1.17 கோடி மக்களே உள்ளனர்.
இந்த நாட்டில் வாழும் ஒரு கேங்ஸ்டரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று அவர் ஒரு வூடு மந்திரவாதியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மந்திரவாதி ‘உள்ளூரில் மந்திரம் தந்திரம் செய்யும் வயதானவர்கள் தான் உங்கள் மகனின் மரணத்திற்கு காரணம்' என்று கூறியிருக்கிறார்.
இதனால் கடும்கோபத்திற்கு ஆளான அந்த கேங் லீடர், அந்த ஊரில் யாரெல்லாம் மந்திரவாதிகள் என்று நினைக்கிறாரோ அவர்கள் அனைவரையும் கொல்ல உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் பேரில் 200 பேரைக் கொன்றிருக்கின்றனர்.
அதில் முக்கால்வாசி 60 முதல் 80 வயதுடையவர்கள் ஆவார்கள்.
கடந்த ஒரே வாரத்தில் 200 பேர் இறந்ததால் அந்த ஊரே கலவரமாக மாறியது.
வூடு என்று குறிப்பிட்டோம் அல்லவா? வூடு என்பது ஒரு மதமே ஆகும். 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் அங்கு தோன்றிய மதத்தின் பெயர் வூடு.
இந்த மதத்தின் தோற்றத்தினால் ஹைதியில் இதுபோன்ற கொலைகள் மற்றும் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இது ஒன்றும் புதிதல்ல, ஆனால், இதுதான் மிகப்பெரிய சம்பவம் என்றே கூறலாம்.
இந்த ஆண்டு மட்டும் இந்த மாந்திரீக நம்பிக்கையால் அங்கு 5000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹைதி ஒரு சிறிய நாடு என்பதால், சட்டம் அவ்வளவு வலுவானதும் கிடையாது. அங்கு இருக்கும் கேங்ஸ்டர்கள் அரசை கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள்.
இதனால் அங்கு பாலியல் வன்முறைகள், போதை மருந்து கடத்தல், கடத்தல்கள், கொலைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பது மிக மிக சகஜம்.