

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் புள்ளிவிவர, சமூக மற்றும் பொருளாதாரத் தரவுகளைச் சேகரித்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு மாபெரும் நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும்.
2023-ல் சீனாவை முந்தி இப்போ உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த 140 கோடி பேரையும் ஒருத்தர் விடாமல் கணக்கெடுக்கப்போறாங்க நம்ம மத்திய அரசு. இந்த 140 கோடி பேரில் நீங்க யாரு, உங்க வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்கு, நீங்க என்ன வேலை செய்றீங்க என்பது போன்ற கேள்விகளுக்கொல்லாம் பதில் தெரிந்து கொள்ளத்தான் இந்த மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடந்துள்ளன.
அதன் பிறகு கொரோனா காரணமாக 2021-ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய அரசாணையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது மத்திய அரசு.
இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை சுயவிவர கணக்கெடுப்பும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் இந்தியாவில் 2026-2027-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) டிஜிட்டல் முறையில் தொடங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'Self-Enumeration' (சுய-கணக்கெடுப்பு) ஆப்ஷனைப் பயன்படுத்தி, தங்களின் வீடு மற்றும் குடும்ப விவரங்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து 16 இலக்க Self-Enumeration ID பெறலாம். இணைய அடிப்படையிலான இந்த சுய கணக்கெடுப்பு வசதி 16 மொழிகளில் கிடைக்கிறது.
ஆன்லைனில் கணக்கெடுப்பு செய்வது எப்படி? (Step-by-Step Guide):
https://se.census.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ சுய கணக்கெடுப்பு இணையதளத்திற்குச் செல்லவும்.
உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து, கேப்ட்சா(Captcha) சரிபார்ப்பை முடிக்கவும்.
குடும்பத் தலைவரின் பெயர், மொபைல் எண் (மற்றும் விருப்பப்பட்டால் மின்னஞ்சல்) பதிவு செய்து, வரும் OTP மூலம் சரிபார்க்கவும்.
அதில் உங்களுக்கு விருப்பமான தமிழ் உட்பட 16 மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
விவரங்களை நிரப்புதல்:
வீட்டு விவரங்கள்: முகவரி, வீட்டின் வகை (சுவர், கூரை), வசதிகள் (மின்சாரம், தண்ணீர், கழிப்பறை).
சொத்து விவரங்கள்: டிவி, ரேடியோ, இன்டர்நெட், வாகனம் போன்றவை.
குடும்ப விவரங்கள்: உறுப்பினர்களின் எண்ணிக்கை, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சாதி விவரங்கள்.
அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் சரிபார்த்து 'Submit' செய்யவும்.
16 இலக்க Self-Enumeration ID (H-ல் தொடங்கும்) SMS/மின்னஞ்சல் மூலம் பெறப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்(Enumerator), வீட்டிற்கு நேரில் வரும்போது, இந்த 16 இலக்க எண்ணை அவர்களிடம் வழங்கினால் போதுமானது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என, வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படுகிறது.