MLA-களுக்கு ஜாக்பாட்..! தமிழக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கார்..!

முதல்முறை எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மற்றும் அலுவலக உதவியாளர்!: விசிக கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அதிரடி முடிவு!
Thalapathy Vijay
Thalapathy Vijay
Updated on

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்குத் (MLA) தொகுதி ஆய்வுப் பணிகளுக்காக கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரவை கூட்டத்தில் விசிக சார்பில் பேசப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கார் வசதி இல்லை என்றும், தங்களைப் போன்ற பல புதிய உறுப்பினர்களின் நிலையும் இதுதான் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று முதல் முறையாக எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் அலுவலக உதவியாளர்களை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் தொகுதியின் பல்வேறு கிராமப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும், அவசரக் காலங்களில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இந்த பிரத்தியேக வாகன வசதிகள் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனக்கு கார் மற்றும் பி.ஏ. வசதி வேண்டும் என வெளிப்படையாக பேரவையில் பேசி, அவைத் தலைவரிடம் கார் வேண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.

280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது தொகுதியில் இருந்து சென்னைக்கு பேருந்து அல்லது ரயிலில் வருவதற்கு பயணப்படி வழங்கப்பட்டாலும், சொந்தமாக வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்திலேயே பேரவைக்கு வருவதாக தெரிவித்தார்.

40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தொகுதிக்குள் சென்று மக்களின் குறைகளைக் கேட்க வாகன வசதியும், உடன் பணியாற்ற செயலாளரையும் நியமித்து ஊதியம் வழங்க வசதியும் இல்லை என்று கூறினார். மேலும் பேரவையில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இதே நிலையில் தான் உள்ளதாகவும், சிலர் மிகவும் எளிய சூழலில் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார். லஞ்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்றால் எம்எல்ஏக்களுக்குத் தேவையான வாகன வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேர்மையாக பணியாற்றும் பொழுது ஏற்படும் நடைமுறைச் சிரமங்களை உறுப்பினர் சுட்டிக்காட்டி உள்ளதாக குறிப்பிட்டார். தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அவையில் இருக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்வதாகக் கூறினார். முதலமைச்சரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் என்பதால், இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் உறுதி அளித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பான உரையாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அரசாணையாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முடிவு மூலம் புதிய உறுப்பினர்கள் தங்கள் தொகுதி முழுவதும் சென்று ஆய்வுப் பணிகள் செய்வது மிகவும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்: இன்று பான்-இந்தியா சூப்பர் ஸ்டார்!
Thalapathy Vijay
logo
Kalki Online
kalkionline.com