

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பெரும்பாலும் ரெயில்களில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கவே விரும்புகின்றனர். ரெயில்களில் டிக்கெட் செலவு மிக மிகக் குறைவு. இதனால்தான் பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரெயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரெயில்வே பல்வேறு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருவதுடன் அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ரெயில் பயணத்தை மேலும் வசதியாகவும் சௌகரியமாகவும் மாற்றுவதற்காக இந்திய ரெயில்வே தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்திய ரெயில்வே தனது முன்பதிவுப் பட்டியல் (Reservation Chart) தயாரிப்பு நடைமுறையைப் புதுப்பித்துள்ளது. பயணிகளின் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில், குறிப்பாக RAC டிக்கெட் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் (Waitlist) உள்ள பயணிகளுக்காக, முன்பதிவுப் பட்டியல் தயாரிக்கும் நேரத்தில்தான் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல் முன்பதிவுப் பட்டியல் இப்போது ரெயிலின் புறப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது: காலை 5:01 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8 மணிக்குள் பட்டியல் தயாராகிவிடும்; மற்ற நேரங்களில் புறப்படும் ரெயில்களுக்கு, புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே பட்டியல் தயாராகிவிடும். இறுதி முன்பதிவுப் பட்டியல் ரெயிலின் புறப்படுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு தயாரிக்கப்படுகிறது; அந்த நேரத்தில், தட்கல் ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் உட்பட காலியாக உள்ள படுக்கைகள் அனைத்தும், RAC மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அதாவது உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளைக் கொண்ட பயணிகள் ரெயிலில் ஏறும் நேரத்தில் இருக்கை உறுதி செய்யப்பட்டாலும்,
காத்திருப்போர் பட்டியல் (WL) அல்லது RAC (ரத்து செய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு) பயணச்சீட்டுகளைக் கொண்டவர்கள் தங்கள் பயணச்சீட்டுகள் உறுதி செய்யப்படுமா என்பது குறித்து பெரும்பாலும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். இந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு தனது ரெயில் முன்பதிவு அட்டவணைக் கொள்கையைத் திருத்தியமைத்தது.
புதிய விதிகளின்படி, இந்தியன் ரெயில்வே முதல் முன்பதிவுப் பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்ட பிறகு, ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இறுதி முன்பதிவுப் பட்டியலை வெளியிடுகிறது.
எனவே பயணிகள் முதல் முன்பதிவுப் பட்டியலில் உங்கள் காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டு உறுதிசெய்யப்படவில்லை என்றால் பதற்றமடையாமல் இரண்டாவது (இறுதி) முன்பதிவுப் பட்டியலைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
தட்கல் ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் RAC மற்றும் காத்திருப்புப் பயணச்சீட்டுகளைக் கொண்ட பயணிகளுக்குக் கிடைக்கும் என்பதால் அவர்களின் பயணச்சீட்டுகள் இறுதிப் பட்டியலில் உறுதிசெய்யப்படலாம். எனவே இறுதி முன்பதிவுப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு பயணிகள் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும் உங்கள் இருக்கை உறுதி செய்யப்படாவிட்டால் உங்கள் ஆன்லைன் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு ரீஃபண்ட் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரெயில்வே தற்போது கொண்டுவந்துள்ள இந்த நடைமுறை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.