
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்தில் முக்கால் பாகத்தை செலவு செய்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். ஒருசிலர் மாத சம்பளம் முழுவதையும் செலவு செய்துவிட்டு அடுத்த மாதம் எப்போது வரும் என்று காத்திருப்பர்களும் உள்ளனர். அந்த வரிசையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தை சரியான வழியில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டியதாக, ரெட்டிட் தளத்தில் அவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
அந்த பதிவில் அவர், 2000-ம் ஆண்டு பெங்களூருவில் ரூ.4,200 மாத சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கியதாகவும், 20 வருடங்களுக்கு பிறகு அவர் ஓய்வு பெறும் போது ரூ.63,000 சம்பளம் வாங்கியதாகவும், இப்போது அவரது வங்கிக்கணக்கில் ரூ.1.01 கோடி இருப்பதாகவும், அதில் இருந்து அவருக்கு FD மூலம் மாதந்தோறும் 60,000 வட்டி கிடைப்பதாகவும் கூறும் அவர், இதற்கு சரியான நிதி திட்டமிடலே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் தனது 27 வயதில் கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு வந்ததாகவும், அப்போது அவரது பாக்கெட்டில் வெறும் ரூ.5,000 மட்டுமே இருந்தது என்றும் கூறுகிறார்.
கடன் எதுவும் இல்லாமல் ரூ.1 கோடி சேர்த்த நபரின் இந்த பதிவு இணையத்தில் பலருக்கும் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது.
நான் ஒருபோதும் கடன் வாங்குவதில்லை, ஒருபோதும் கடன் கொடுப்பதில்லை என்றும் அவர் தனது பதிவில் விளக்கினார். இவரிடம் கிரெடிட் கார்டுகளும் இல்லை. ஆடம்பர கார்ரோ, இரு சக்கர வாகனமோ இல்லை. அவரது குடும்பம் ரூ.25,000 க்குள் வசதியாக சந்தோஷமாக வாழ்வதாகவும் கூறுகிறார். அவரது வாழ்க்கை முழுவதும் Proofreader வேலை மட்டுமே அவரது ஒரே வருமான ஆதாரமாக இருந்தது. அவர் கடினமாக உழைத்தார், ஆனால் ஒழுக்கத்துடன் வாழ்ந்தார். இறுதியில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு அவரது அதிக கிட்டப்பார்வை காரணமாக வேலை விட்டு விலகியதாக கூறினார்.
மனைவி மற்றும் சமீபத்தில் வேலைக்கு சென்று சம்பாதிக்கத் தொடங்கிய அவரது மகள் உட்பட மூன்று பேர் கொண்டது அவரது குடும்பம்.
இவர்கள் ரூ.25,000 மாத செலவிற்குள் நன்றாக வாழ முடிகிறது. பெங்களூருவில் ரூ.6,500க்கு ஒரு சாதாரண 1BHK வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே வீடு மாறி உள்ளதாக கூறுகிறார்.
அவரது வாழ்க்கை முறை சிக்கனம் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது ஸ்கூட்டரை பல ஆண்டுகளுக்கு முன்பு விற்றுவிட்டு எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறார். இவரது குடும்பம் அரிதாகவே மருத்துவரிடம் சென்றுள்ளதாகவும், அவர்களது வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்.
தனது ரூ.1 கோடி சேமிப்பு பயணத்தைப் பற்றி சிந்திக்கும் போது, தனது சாதனைகளுக்கு காரணம் அதிர்ஷ்டம் அல்ல, ஒழுக்கமே என்று கூறுகிறார். கல்வி, புத்திசாலித்தனம், சுகாதாரம், நேரம், பொறுமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை எவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய சொத்துக்கள் என்ற அவரது அறிவுரை தெளிவாக உள்ளது.
இவரது பதிவு இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இவரின் உறுதியைப் பாராட்டினர். மேலும் இந்த சாதனை நிதி வெற்றியாக மட்டுமல்லாமல், மன உறுதி மற்றும் விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்பட்டது. நிதி சுதந்திரத்திற்கு எப்போதும் அசாதாரண வருவாய் தேவையில்லை, நிலையான, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் போதுமானதை அறியும் திறன் மட்டுமே தேவை என்பதற்கான உயிருள்ள சான்று இவர் மட்டுமே என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பலருக்கும் இவரின் கதை தனிப்பட்ட முறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.