

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை முடிவுக்கு வராத சூழலில் உள்ளது. இந்நிலையில் போர் தொடங்கிய நாள் முதலே உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
ஆனால் வணிக சிலிண்டரின் விலையை மட்டும் மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ.1,500-க்கும் மேல் உயர்த்தியது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை ரூ.3.14 மற்றும் டீசல் விலை ரூ.3.11 உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடக்க இருந்த காரணத்தினாலேயே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, முதல்வர்களும் பதவியேற்ற சூழலில், இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு.
அமெரிக்கா மற்றும் ஈரான் போர் காரணமாக உலக அளவில் நிலவிவரும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாகவே தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதை அடுத்து, அவ்வழியே செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதால் எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வணிக சிலிண்டரின் விலை உயர்வால் பல ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், சில ஹோட்டல்கள் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கின. மேலும் சில ஹோட்டல்கள் சிலிண்டர் விலை உயர்வால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியது.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.65-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.95.26-க்கும் விற்பனையாகிறது.
சிஎன்ஜி எரிவாயுவும் ஒரு கிலோ ரூ.2 உயர்ந்து, ரூ.91.50-க்கு விற்பனையாகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதோடு அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கத்தை வாங்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தங்கத்தின் மீதான வரியை மத்திய அரசு 6-லிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது மத்தியில் பேரிடியை இறக்கியுள்ளது.